LATEST NEWS
தாயைக் காண தவித்த இரு கண்கள்… கரம் கொடுத்த மனிதநேயம்..! கண்ணீரை துடைத்த ஒரு டம்ளர் தண்ணீர்..! நெகிழ வைக்கும் இரு மனிதர்களின் நிஜக் கதை…!!
இன்றைய அவசர உலகில் மனிதநேயம் இன்னும் உயிரோடு இருப்பதை உணர்த்தும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் இயங்கும் அங்கித் பாண்டே என்ற இளைஞர், தனது வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய வந்த ஊழியர் ஒருவரிடம் வழக்கம் போலப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த ஊழியர் மிகவும் தயக்கத்துடன் குடிக்க ஒரு டம்ளர் தண்ணீர் கேட்டுள்ளார். அவரது கண்கள் சிவந்து, மிகுந்த மனவேதனையுடன் இருந்ததைக் கண்ட அங்கித், அவரிடம் நலம் விசாரித்தார். அப்போது, தனது தாய் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி அந்த ஊழியர் கண்ணீர் விட்டுள்ளார். மேலும், ரயிலில் ஊருக்குச் செல்ல 30 மணி நேரம் ஆகும் என்பதால், தன் தாயை உயிருடன் பார்ப்போமா என்ற கவலையில் அவர் தவித்துக் கொண்டிருந்தார்.
அன்றைய தினம் அந்த ஊழியர் உணவு ஏதும் உட்கொள்ளவில்லை என்பதை அறிந்த அங்கித், முதலில் அவருக்குத் தனது உணவைப் பகிர்ந்து கொடுத்தார். பின்னர், அவரது நிலையைப் புரிந்து கொண்டு உடனடியாக ரூபாய் 4,000 மதிப்பிலான அவசர விமான டிக்கெட்டைத் தனது சொந்தப் பணத்தில் முன்பதிவு செய்து தந்தார். இதுவரை விமான நிலையத்திற்கே சென்றிராத அந்த ஊழியருக்குத் தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கி விமானத்தில் அனுப்பி வைத்தார். சில மணி நேரங்களிலேயே தனது சொந்த ஊரை அடைந்த அந்த ஊழியர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயைச் சந்தித்தார். பின்னர் அங்கித்தைத் தொடர்பு கொண்டு, தனது தாய் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
தாயின் உடல்நிலை சீரான பிறகு, அந்த டெலிவரி ஊழியர் அங்கித் தனக்காகச் செலவழித்த ரூ.4,000 பணத்தை அவரது வங்கிக் கணக்கிற்குத் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த இக்கட்டான நிலையிலும் அவரது நேர்மையைக் கண்டு வியந்த அங்கித், அந்தப் பணத்தை மீண்டும் அவருக்கே அனுப்பி வைத்து, தாயின் மருத்துவச் செலவுகளுக்குப் பயன்படுத்துமாறு அன்போடு கூறியுள்ளார். ஒரு சாதாரண தண்ணீர் கேட்ட நிகழ்வில் தொடங்கி, ஒரு மகனை அவனது தாயிடம் சரியான நேரத்தில் கொண்டு சேர்த்த இந்த மனிதநேயப் பயணம், பணத்தை விட அக்கறையும் சரியான நேரத்தில் செய்யும் உதவியும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நமக்கு அழகாக உணர்த்துகிறது.
