CRIME
சட்டம் காப்பவரே கடத்தல்காரரா..? காரில் மது கடத்திய தலைமை காவலர் சஸ்பெண்ட்..!!
திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்களைக் கடத்திய வழக்கில், காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர் ஒருவர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் திருவாரூர் மாவட்டத்தின் ஒரு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்திச் சோதனையிட்டபோது, அதில் கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 300-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வரும் கார்த்திகேயன் மற்றும் அவருடன் இருந்த இருவர் இந்தக் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையைச் சேர்ந்த அதிகாரியே மதுக் கடத்தலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
