CRIME
அடப்பாவமே…! போன் பேசலன்னு இப்படியா பண்றது..? சந்தேகப் பேயால் காதலியைத் தீயிட்டு கொளுத்திய வாலிபர்..! ஆந்திராவையே உலுக்கிய பகீர் சம்பவம்..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கிய காதல் தொடர்பு, கொடூரமான கொலையில் முடிவடைந்துள்ளது. சிலகலூரிப்பேட்டையைச் சேர்ந்த ஹசீனா என்ற பி.டெக் மாணவி, குண்டூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தபோது, இன்ஸ்டாகிராம் வாயிலாகப் பல்நாடு மாவட்டத்தின் கரம்பூடி மண்டலத்தைச் சேர்ந்த பாலா சைதுலு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த அறிமுகம் காதலாக மாறி, கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். பி.டெக் படிப்பை முடித்த ஹசீனாவுக்கு சுல்லூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால், பாலா சைதுலு தனது சொந்த ஊரிலேயே விவசாயம் செய்து வந்தார்.
வேலைக்குச் சென்ற பிறகு ஹசீனா பணிச்சுமையால் பிஸியானதால், பாலா சைதுலுவிடம் பேசுவது குறைந்தது. இதனால் ஹசீனா தன்னை புறக்கணிப்பதாகவும், வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதாகவும் பாலா சைதுலுவுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இந்த சந்தேகத்தின் காரணமாக, ஹசீனாவைக் கொலை செய்ய அவன் திட்டம் தீட்டினான். அதன்படி, சுல்லூர்பேட்டையில் இருந்த ஹசீனாவைச் சிலகலூரிப்பேட்டைக்கு வரவழைத்து, அங்கிருந்து கெஞ்சிக் கூப்பிட்டு கரம்பூடிக்கு அழைத்துச் சென்றான். பின்னர் நாகார்ஜுன சாகர் கால்வாய் அருகே உள்ள ஒரு தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்று, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஹசீனாவைத் தாக்கி கொடூரமாகக் கொலை செய்தான்.
கொலை செய்த பிறகு, அடையாளங்களை மறைப்பதற்காக உடலின் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான். வீடு திரும்பாத ஹசீனாவைத் தேடிய அவரது பெற்றோர் காவல நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில், நாகார்ஜுன சாகர் கால்வாய்க்கரையில் அரைகுறையாக எரிந்த நிலையில் ஒரு சடலம் மீட்கப்பட்டது. தடயவியல் சோதனைகள் மூலம் அது ஹசீனாவின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் பாலா சைதுலுவைப் பிடித்துப் போலீஸார் விசாரணை நடத்தியதில், அவன் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, அவனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தது.
