LATEST NEWS
ரயில் என்ன பிரைவேட் பஸ்ஸா…? ஒரே போன்கால்… மிரண்டு போய் பிரேக் பிடித்த லோகோ பைலட்..! பின்னணியில் உள்ள அந்த ‘பவர்ஃபுல்’ நபர் யார்…?!
ரயில்வே கேட் அருகே கூட்டத்தில் நின்றிருந்த செல்வாக்குமிக்க நபர் ஒருவர், ஒரே ஒரு போன்கால் மூலம் ஓடிக்கொண்டிருந்த ரயிலை நிறுத்திய சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே கேட் மூடப்பட்டு சாலையில் மக்கள் வாகனங்களில் காத்திருந்தபோது, அந்த நபர் தனது கூட்டாளிகள் ரயிலில் ஏறுவதற்காக போன் செய்து ரயிலை நிறுத்தியுள்ளார். அங்கு காரில் காத்திருந்த நபர் ஒருவர், “இவர் நீண்ட நேரமாக போனில் பேசிக்கொண்டிருக்கிறார், இவரது அதிகாரத்தால் ரயில் நின்றால் நிச்சயம் இவர் பெரிய ஆளாகத்தான் இருக்க வேண்டும்” என்று கூறி இச்சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்தார்.
அந்த நபர் போனில் பேசி முடித்த சில நிமிடங்களிலேயே ரயில் அந்த கேட் பகுதியிலேயே வந்து நின்றுள்ளது. உடனடியாக அங்கு காத்திருந்த பயணிகள் சிலர் ரயிலுக்குள் ஏறிச் சென்றுள்ளனர். ரயிலை இவ்வாறு இடையில் நிறுத்துவதால் எவ்வளவு பெரிய ஆபத்து மற்றும் இழப்பு ஏற்படும் என்று வீடியோவை எடுத்தவர் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, “ரயில் என்ன தனியார் பேருந்தா, நினைத்த இடத்தில் நிறுத்துவதற்கு?” என்றும், ரயிலை இயக்கிய லோகோ பைலட் மீது கடும் நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் இணையவாசிகள் கொந்தளித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/Dbz4BBryTt-/?utm_source=ig_web_button_share_sheet
இந்த சம்பவம் குமார் பாக் ரயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்ததாக எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்ட வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளித்த ரயில்வே சேவை நிர்வாகம், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சமஸ்திபூர் கோட்ட ரயில்வே மேலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. பயணி ஒருவர் ரயிலின் உள்ளே இருந்து செயின் இழுத்திருக்கலாம் அல்லது ரயில்வே ஊழியர் யாராவது தனது நட்பின் காரணமாக ரயிலை நிறுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், ரயில்வே நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ நடவடிக்கைக்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
