LATEST NEWS
மறு தேர்தலை சந்திக்க வக்கில்லாத “கூட்டுக் களவாணி” விஜய்… ஆட்சி இருக்குற ஆணவத்துல ஆடாதீங்க… தவெகவை எச்சரித்த அதிமுக..!!
கடந்த ஆண்டு கரூரில் நடந்த தவெக மாநாட்டு நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு அதிமுக தனது எக்ஸ் பக்கத்தில் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது. மேடையில் முதலமைச்சர் பயன்படுத்திய “கூட்டுக் களவாணிகள்” என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக, ஆட்சி இருக்கும் ஆணவத்தில் தரம் தாழ்ந்து பேச வேண்டாம் என்றும், பதவி வரும்போது பணிவு அவசியம் என்றும் சாடியுள்ளது.
திமுகவை எதிர்த்து 234 தொகுதிகளிலும் தனித்து களம் கண்டு, இன்று வரை தனி அடையாளத்துடன் எதிர்க்கட்சியாகச் செயல்படுவது நாங்கள் தான் என்று அதிமுக சுட்டிக்காட்டியுள்ளது. மாறாக, திமுகவின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற அதன் கூட்டணிக் கட்சிகளை இழுத்து, “கூட்டுக் களவாணித்தனம்” செய்து ஆட்சியில் அமர்ந்திருப்பது முதலமைச்சர் விஜய் தான் என்றும் அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், கரூர் விபத்தின் போது தாமதமாக வந்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்காத ஒருவர் எப்படி தலைவராக முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
முதலமைச்சர் விஜய்யை “ஊதிப் பெரிதாக்கப்பட்ட வெற்று பிம்பம்” என்று விமர்சித்துள்ள அதிமுக, கரூர் துயரம் நடந்த மூன்றே மாதங்களில் மலேசியாவில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் குத்தாட்டம் போட்டதை நினைவுபடுத்தியுள்ளது. மக்கள் நலத் திட்டங்களை வழங்குவதில் அதிமுக ஐஎஸ்ஐ முத்திரை பெற்றது என்றும், டயருக்கு அடியில் ரீல்ஸ் எடுக்கும் ஒரு கட்சிக்கு தங்களைப் பற்றிப் பேச அருகதை இல்லை என்றும் சாடியுள்ளது. அத்துடன், அவர் உத்தமராக இருந்தால் திமுகவின் தயவில் அமையும் ஆட்சியை உதறிவிட்டு மறு தேர்தலைச் சந்திக்க வேண்டும் என சவால் விடுத்துள்ளது.
மறுபுறம், முதலமைச்சர் கரூரில் அரசியல் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், ஹூண்டாய் நிறுவனத்தின் ₹38,000 கோடி மதிப்பிலான முக்கிய முதலீடு தமிழ்நாட்டை விட்டுப் போயுள்ளதாக அதிமுக சுட்டிக்காட்டியுள்ளது. தினசரி மின்வெட்டு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் மக்கள் அவதிப்படுவதைத் தடுக்க இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. கரூர் விபத்து வழக்கு குறித்து சிபிஐ விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவதால், உண்மைகள் விரைவில் வெளிவரும் என்றும் “வாழ்க்கை ஒரு வட்டம், We are waiting” என்றும் அதிமுக எச்சரித்துள்ளது.
