LATEST NEWS
“அவர் பச்சையாகப் பொய் சொல்கிறார்… திமுகவை விமர்சிக்க நிர்மல் குமாருக்கு தகுதியே இல்லை..! இப்படியான ஆட்களை பக்கத்துல சேர்க்காதீங்க..!” முதல்வர் விஜய்க்கு ஆர்.எஸ்.பாரதி ஓபன் அட்வைஸ்..!!
அரசியலில் பல்வேறு கட்சிகளுக்குச் சென்று வந்த அமைச்சர் நிர்மல் குமாருக்கு திமுகவை விமர்சிக்கத் தகுதியில்லை என்றும், அவர் பச்சையாகப் பொய் சொல்கிறார் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனுஷ், அண்ணாமலை என புதிதாக யார் கட்சி தொடங்கினாலும் முதல் ஆளாகச் சென்று உறுப்பினர் அட்டை வாங்குவது அவருக்குப் பழக்கமாகும் என்றும், இப்படியான ஆட்களை அருகில் சேர்க்க வேண்டாம் என்று முதல்வர் விஜய்க்கு அறிவுறுத்துவதாகவும் கூறினார். மேலும், திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 வாங்கியதாகக் குறை கூறும் நிலையில், தற்போது பாட்டிலுக்கு ரூ.20 கூடுதலாக வசூலிப்பதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தொகுதி மறுவரையறை மசோதாவைக் கடந்த முறை எதிர்த்து முறியடித்தது திமுகதான் என்றும், நாடாளுமன்றத்தில் தங்கள் திருத்தங்களை ஏற்றால் மட்டுமே மசோதாவை ஆதரிப்போம் என்றும் கூறினார். ஆனால், நாடாளுமன்றத்தில் மசோதா வருவதற்கு முன்பே இவர்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மக்களைத் திசை திருப்புவதாகத் தவெக அரசை விமர்சித்தார். தவெக அரசின் முதலீட்டாளர் மாநாட்டில் பத்திரிகையாளர்களை அனுமதிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், அங்கு வந்தவை அனைத்தும் தங்கள் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களின் 2-ம்கட்ட முதலீடுகள் தான் என்றும், பொதுமக்களுக்கு உண்மை தெரிந்துவிடும் என்பதற்காகவே ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
தற்போது சென்னையில் சொத்து வரி அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் கொதிப்படைந்த பிறகே தற்காலிகமாக அதனை நிறுத்தி வைத்துள்ளதாகவும், இந்த சொத்து வரி உயர்வை முழுமையாகக் கைவிடாவிட்டால் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியினர் மீதான புகாரில் 100 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை என்றும், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக கலந்து கொள்ளுமா என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் முறைப்படி அறிவிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக, “மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி அமைத்துவிட்டது; அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை என இரு கட்சியினரும் பேசியதன் மூலம் டெல்லியில் திமுக சரணடைந்துள்ளது” என்று அமைச்சர் நிர்மல் குமார் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
