CRIME
16 வயதில் கடத்தல்…! போலி ஆதார் அட்டை… 6 ஆண்டுகளுக்குப் பின்… நாக்பூர் சிறுமிக்கு நடந்த கொடூரம் அம்பலம்..!!
நாக்பூரின் மங்காபூர்-ஜிங்காபாய் டக்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், 2020-ம் ஆண்டு தனது 16-வது வயதில் சமீர் அலி என்பவரால் கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாகச் சுரண்டப்பட்டதாகக் கூறி 6 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையை அணுகியுள்ளார். பல ஆண்டுகளாகத் தான் அனுபவித்த உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளை விவரித்துள்ள அந்தப் பெண், தற்போது 4 வயதுக் குழந்தையின் தாயாக உள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட சமீர் அலி, அச்சிறுமியின் பெயர் மற்றும் வயதை அதிகரித்து போலி ஆதார் அட்டை ஒன்றை உருவாக்கியுள்ளார். தொடர்ந்து 2021-ம் ஆண்டில், தனது குடும்ப உறுப்பினர்களான அஜிஸா முனீர் அலி மற்றும் முனீர் அலி ஆகியோர் முன்னிலையில், ஒரு கோயிலில் வைத்து மௌலானா அன்வர் என்பவரைக் கொண்டு கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளார். போலி ஆதார் அட்டையைப் பயன்படுத்தியே அப்பெண்ணை அரசு மகப்பேறு மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர்.
மதமாற்றம் மற்றும் சுரண்டல் நோக்கத்திற்காகவே இந்தச் சதி திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாகக் காவல்துறையினர் போலி ஆதார் அட்டையை ஆய்வு செய்து, சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்வதோடு மருத்துவ ஆதாரங்களையும் சேகரித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பாரதிய நியாய சம்ஹிதா, போக்சோ சட்டம், குழந்தை திருமணத் தடைச் சட்டம் மற்றும் ஆவண மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
