LATEST NEWS
நடுங்கும் காஷ்மீர்..! பரபரப்பான சந்தையில் ஹெட் கான்ஸ்டபிள் சுட்டுக்கொலை… பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் உள்ள லால் சௌக் என்ற பரபரப்பான சந்தையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆஷிக் ஹுசைன் குரேஷி என்ற ஹெட் கான்ஸ்டபிளை, நடந்து வந்த பயங்கரவாதி ஒருவன் மிக அருகில் வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டுச் சந்தைக் கூட்டத்திற்குள் புகுந்து தப்பிச் சென்றுள்ளான். படுகாயமடைந்த காவலர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இத்தாக்குதல் தொடர்பான கொடூரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்குப் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்’ பொறுப்பேற்றுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அனந்த்நாக் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாப்புப் படையினரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தப்பிச் சென்ற பயங்கரவாதியைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையும் வாகன சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இந்தச் சிசிடிவி காட்சிகளைச் சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என்றும், மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
அமர்நாத் யாத்திரை நடைபெற்று வரும் சூழலில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நாம் பயந்துவிட மாட்டோம்; மனிதநேயத்திற்கு எதிரான இச்செயல்களுக்குப் பலமாகப் பதிலடி கொடுக்கப்படும்” என்று முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
