LATEST NEWS
விஜய் காலடியில் வந்து விழுந்துட்டாரு வைகோ.. அவரு தோத்துட்டாரு… மேடையில் வெடித்த நாஞ்சில் சம்பத்… தமிழக அரசியலில் பரபரப்பு..!!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் விழுப்புரத்தில் பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், வைகோவின் கடந்த கால அரசியல் முயற்சிகளையும் தற்போதைய சூழலையும் ஒப்பிட்டுப் பேசியது மதிமுக தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், “தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய ஆட்சி மாற்றமும், அதிகார மாற்றமும் வர வேண்டும் என்பது நீண்டகாலமாகவே மக்களின் கனவாக இருந்தது. இந்தக் கனவை நனவாக்க 1994-ம் ஆண்டிலேயே வைகோ தீவிரமாக முயற்சி செய்தார். ஆனால், பல போராட்டங்களுக்கு மத்தியிலும் அவரால் அந்த இலக்கை எட்ட முடியாமல் போய்விட்டது” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “அன்று வைகோவால் முடியாத அந்த சாதனையை, இன்று எங்கள் தலைவர் விஜய் சாதித்துக் காட்டியுள்ளார். இதனால், அன்று முயற்சி செய்து தோற்றுப்போன வைகோ, தற்போது எங்கள் தலைவர் விஜய்யின் காலடியில் வந்து விழுந்துவிட்டார்” எனப் பேசினார். வைகோவை இழிவுபடுத்தும் வகையில் நாஞ்சில் சம்பத் பேசிய இந்த காரசாரமான கருத்துகள், மதிமுக மற்றும் தவெக ஆகிய இரு தரப்புக்கும் இடையே புதிய அரசியல் மோதலை உருவாக்கியுள்ளன.
