LATEST NEWS
“என் தந்தைக்கு அடுத்து என்னை வழிநடத்துற ஒரே நபர் இவர்தான்..!” மேடையிலேயே அமைச்சர் பர்வேஸ் உடைத்த 15 வருட ரகசியம்.. நெஞ்சை உலுக்கும் நெகிழ்ச்சி பேச்சு..!!
சென்னை தி.நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ், தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் குறித்து மிகுந்த நெகிழ்ச்சியுடனும் உருக்கத்துடனும் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகாலமாகத் தான் அண்ணன் என்.ஆனந்துடன் இணைந்து பயணித்து, அவராலேயே இந்த அளவிற்கு அரசியல் களத்தில் வளர்ந்து நிற்பதாக அவர் பெருமையுடன் குறிப்பிட்டார். தனது சொந்தத் தந்தைக்கு அடுத்தபடியாகத் தன்னைத் தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் நல்வழியில் வழிநடத்தக்கூடிய ஒரே நபர் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மட்டும்தான் என்று மேடையிலேயே நெகிழ்ந்து பேசினார்.
தான் இன்று அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகிப்பதற்குக் காரணியாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் என்.ஆனந்த் ஆகிய இருவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தனது கடினமான உழைப்பைச் சரியாக அடையாளம் கண்டு, அதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யிடம் முறைப்படியாகக் கொண்டு போய் சேர்த்துத் தனக்கு இந்த அமைச்சர் பதவியைப் பெற்றுத் தந்தவர் அண்ணன் ஆனந்த் தான் என்று பர்வேஸ் பகிரங்கமாக உடைத்தார். நேரம் தவறாமை, பொறுப்புணர்ச்சி, விசுவாசம் மற்றும் தெய்வ பக்தி ஆகிய நற்பண்புகளைக் கொண்ட என்.ஆனந்தை தி.நகர் தொகுதி மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்ததற்காகத் தொகுதி மக்களுக்குத் தவெக சார்பாகத் தனது நன்றியையும் பதிவு செய்தார்.
