LATEST NEWS
“நாம செத்துடுவோம்… வாழ்க்கையின் கடைசி நொடி என நினைத்தோம்” பேரிடருக்கு நடுவே வீறுகொண்டு நின்ற ‘பச்சை வீடு’… நேபாள வெள்ளத்தில் தப்பிய வீட்டின் உரிமையாளர் பகிர்ந்த திக்திக் நிமிஷங்கள்..!!
நேபாள நாட்டின் நுவாகோட் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் ஆபத்தான வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையை உடைத்துக்கொண்டு சீறிப்பாய்ந்த வெள்ள நீர், சுற்றியிருந்த பல அடுக்குக் கட்டடங்கள், வாகனங்கள் மற்றும் மக்களின் உடைமைகளை நொடிப் பொழுதில் அடித்துச் சென்றது. இத்தகைய பேரழிவின் கோரத்தாண்டவத்திற்கு மத்தியில், ‘பிரகாஷ்’ என்பவருக்குச் சொந்தமான 40 ஆண்டுகள் பழமையான பச்சை நிறச் சிறிய வீடு மட்டும் சிறிதும் சேதமடையாமல் அசைக்க முடியாமல் உறுதியுடன் நின்றது. சுற்றிலும் அழிவுகள் நிலவிய சூழலில் இந்த பச்சை வீடு மட்டும் வீறுகொண்டு நிற்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்தியது.
வெள்ள நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வீட்டின் கீழ் தளத்தை மூழ்கடித்தபோது, இனி உயிரோடு பிழைக்க வாய்ப்பில்லை என்றே எண்ணியதாக வீட்டின் உரிமையாளர் பிரகாஷ் கண்ணீர்மல்கத் தெரிவித்தார். நிலைமையின் தீவிர உணர்ந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக வீட்டின் மேல் தளத்திற்குச் சென்று, சுற்றிலும் நீர் சூழ்ந்த நிலையில் மணிக்கணக்கில் உயிருக்குப் போராடியபடி காத்துக்கொண்டிருந்தனர். பின்னர் வெள்ளத்தின் வேகம் சற்று குறைந்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் மேல் தளத்தில் தவித்துக் கொண்டிருந்த பிரகாஷின் குடும்பத்தினரை பத்திரமாக மீட்டுப் பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்.
சுற்றியிருந்த பல நவீனக் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பல தசாப்த கால பழமையான இந்த சிறிய கட்டடம் எப்படித் தப்பியது என்பது குறித்துக் கட்டிடக் கலை வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அந்த வீட்டின் உறுதியான கட்டுமானம், அதன் வடிவம் மற்றும் வெள்ள நீரின் பிரதான ஓட்டப் பாதையில் இருந்து சற்று விலகி அமைந்திருந்த புவியியல் அமைப்பு ஆகியவையே இது இடிந்து விழாமல் தப்பித்ததற்குக் காரணம் என அவர்கள் கணிக்கின்றனர். பேரழிவுக்கு இடையே ஒரு குடும்பம் அசாத்தியமான முறையில் உயிர்தப்பிய இந்தச் செய்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்குப் பெரும் நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்துள்ளது.
