LATEST NEWS
“காப்பாத்துங்க சார்..!” திருடச் சென்று லாக் ஆன நபர்கள்.. மக்களிடம் அடி வாங்க பயந்து பூட்டிய கடைக்குள் இருந்து.. 112-க்கு கால் பண்ணி ஹெல்ப் கேட்ட விசித்திர திருடர்கள்..!!
குஜராத் மாநிலம் வாப்பியில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 7:30 மணியளவில் மணீஷ் என்பவர் தனது நகைக் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். இரவில் எலக்ட்ரிக் கட்டருடன் வந்த இரண்டு திருடர்கள், கடையின் ஷட்டரின் பூட்டை அறுத்து உள்ளே புகுந்துள்ளனர். அப்போது கட் செய்யும் சத்தம் கேட்டு, எதிரே வசித்து வந்த நிகில்பாய் விழித்துக் கொண்டு, தனது நண்பர் ஆகாஷ்பாய் மற்றும் கடை உரிமையாளர் மணீஷுக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து மணீஷ் தனது சகோதரர் நீரஜுடன் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில், அக்கம் பக்கத்தினரும் அங்கே திரண்டனர்.
கடையின் ஷட்டர் பாதி திறந்திருப்பதை வைத்து உள்ளே திருடர்கள் இருப்பதை மக்கள் உணர்ந்தனர். உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட பொதுமக்கள், திருடர்கள் தப்பியோட முடியாதபடி கடையின் ஷட்டரை வெளியிலிருந்து பூட்டி மூடினர். வெளியே ஆக்ரோஷமான கூட்டம் கூடியதாலும், தப்பிக்க வேறு வழி ஏதும் இல்லாததாலும் பயந்துபோன திருடர்கள் நடுங்கத் தொடங்கினர். உடனே, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவசர உதவி எண்ணான 112-க்குத் தொடர்பு கொண்டு, தாங்கள் கடைக்குள் சிக்கிக் கொண்டதாகவும், வந்து காப்பாற்றுமாறும் காவல்துறையினரிடம் கெஞ்சியுள்ளனர்.
தகவல் கிடைத்ததும் ரோந்துப் பணியில் இருந்த உமர்காம் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து, கடையின் ஷட்டரைத் திறந்தனர். ஆத்திரத்தில் இருந்த பொதுமக்களின் தாக்குதலிலிருந்து இரு திருடர்களையும் மீட்ட போலீசார், அவர்களைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். திருடச் சென்று மாட்டிக்கொண்ட திருடர்களே தங்களைக் காப்பாற்ற போலீஸை அழைத்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
