CRIME
“குண்டர் சட்டத்தில் தூக்குவோம்!” மதுரையில் பட்டியலின மக்கள் வீடுகள்.. சேதப்படுத்தப்பட்ட வழக்கில் எஸ்பி அதிரடி நடவடிக்கை..!!
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயம்பட்டி கிராமத்தில், 2026 ஜூலை 19 அன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கும், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது, அந்த மூன்று இளைஞர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி மிரட்டியதுடன், அங்கு இருந்த சுப்பன் என்ற முதியவரைத் தாக்கியுள்ளனர். மேலும், அப்பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களின் நான்குக்கும் மேற்பட்ட வீடுகளையும் சேதப்படுத்திவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த முதியவர் சுப்பன் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் அபிநவ் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதனைத் தொடர்ந்து, வீடுகளைச் சேதப்படுத்திய குற்றத்திற்காக ராமர், லட்சுமணன் மற்றும் பிரவீண் ஆகிய மூன்று இளைஞர்களைப் போலீசார் கைது செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அசம்பாவித சம்பவத்தைத் தொடர்ந்து, காயம்பட்டி கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அசம்பாவிதங்களைத் தவிர்க்க அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது போன்ற சமூக ரீதியான மோதல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும், தேவைப்பட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
