LATEST NEWS
“48 லட்சம் கொடுத்தாச்சு.. 10 மாசமா ஆவணமே இல்லை..!” மலேசிய மாணவர் வீடியோவுக்கு அமைச்சர் வன்னி அரசு நறுக்குத் தெறிக்கும் பதில்..!!
தமிழக சட்டசபைக் கூட்டத்தில், அம்பேத்கர் அயலகக் கல்வி திட்டத்தின் கீழ் நிதி சரிவர வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மலேசியாவில் பயின்று வரும் தமிழக மாணவர் ஒருவர் கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை எனக் கூறி வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், இதற்கு அமைச்சர் வன்னி அரசு சட்டசபையில் மறுப்புத் தெரிவித்துள்ளார். அம்மாணவருக்கு அரசு வழங்கியுள்ள நிதியைத் தேதி வாரியாகக் குறிப்பிட்ட அமைச்சர், உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காமல் தவறான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டை அம்மாணவர் சுமத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
அமைச்சரின் விளக்க உரையில், அம்மாணவரின் கல்வி நலனுக்காக இதுவரை ரூ.48 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், முதலாம் ஆண்டு கல்விக்கட்டணமாக வழங்கப்பட்ட ரூ.31 லட்சத்திற்கு 10 மாதங்கள் கடந்த பின்னரும் ஆவணங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், மாணவரின் குற்றச்சாட்டை முறையாக ஆராயாமல் அரசியல் கட்சிகள் உள்நோக்கத்துடன் பேசி வருவதாகவும், தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைக்கு. ரூ.131 கோடி ஒதுக்கப்பட்டு, விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் பயிலும் தமிழக மாணவர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் வன்னி அரசு, தான் சமூக நீதித்துறை அமைச்சரான பின்னரே இத்திட்டத்திற்கான உதவித்தொகை 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் சட்டசபையில் விளக்கம் அளித்தார்.
