CRIME
பெத்த தாயை இப்படியா மிதிப்பாய்?”.. பார்வையற்ற தாயின் முகத்தில் உதைத்த கொடூர மகன்.. கலங்க வைக்கும் பின்னணி..!!
திருப்பத்தூர் மாவட்டம் விசமங்கலம் சித்தேரி பகுதியைச் சேர்ந்த மனோகரன்-விஜயலட்சுமி தம்பதியின் மகன்களான கோபி மற்றும் ஜோதிராஜ் ஆகியோருக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. தந்தை மறைவுக்குப் பின் தங்களுக்குள் சமமாகப் பிரிக்கப்பட்ட நிலத்தில் ஜோதிராஜ் வீடு கட்டி வசித்து வந்த நிலையில், அந்த நிலத்தையும் தனக்கே தர வேண்டும் என கோபி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இந்தச் சூழலில், வயது மூப்பு காரணமாகப் பார்வையை இழந்த தாய் விஜயலட்சுமி ஜோதிராஜின் வீட்டில் தங்கி வந்த நிலையில், கடந்த 7-ஆம் தேதி மதுபோதையில் அங்கு வந்த கோபி அத்துமீறி நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கிச் சண்டையிட்டுள்ளார். அப்போது சண்டையைத் தடுக்க முயன்ற பார்வையற்ற தன் பெற்ற தாயைக் கோபி காலால் எட்டி முகத்தில் உதைத்துக் கீழே தள்ளிய கொடூரக் காட்சி அங்கிருந்தவர்களின் செல்போனில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்தக் கடுமையான தாக்குதலில் ஜோதிராஜ் மற்றும் அவரது தாய் விஜயலட்சுமி ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஜோதிராஜ் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையிலும், இதுவரை காவல்துறை தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். சொத்துக்காகப் பெற்ற தாய என்றும் பாராமல், அதுவும் பார்வையற்ற முதியவரைப் பாதககன் போல் காலால் எட்டி உதைத்த மகனின் மனிதநேயமற்ற இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
