CRIME
விளையாடச் சென்ற 10 வயது சிறுவன் மாயம்… பக்கத்து வீட்டு பேஸ்மென்ட்டில் சடலமாக மீட்பு..! கணினி ஆசிரியரின் வீட்டிற்குள் நடந்தது என்ன..?!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர், கஜானி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நகை வியாபாரி ஒருவரின் 10 வயது பேரனான வைபவ் வர்மா படுகொலை செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பிய வைபவ், மதியம் 2 மணியளவில் மிதிவண்டியில் விளையாடச் சென்றுள்ளார். ஆனால், இரவு வரை சிறுவன் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிறுவனைத் தேட காவல் நிலையக் குழுக்கள் மற்றும் சிறப்புப் படை என மொத்தம் 5 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுவன் வைபவ் பக்கத்து வீட்டில் வசிக்கும் கணினி ஆசிரியரான சர்வேஷ் பட் என்பவருடன் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சர்வேஷ் பட்டிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில், சிறுவனின் உடலைத் தனது வீட்டின் அடித்தளத்தில் மறைத்து வைத்திருப்பதை ஒப்புக் கொண்டார். அங்கு விரைந்த காவல்துறையினர் வைபவ்வின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரர் சர்வேஷ் பட்டை காவல்துறையினர் கைது செய்து, கொலையின் பின்னணி மற்றும் காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
