LATEST NEWS
“கொளத்தூரில் எத்தனை ரீ-கவுண்ட் வேணா கேளுங்க, 1 ஓட்டு கூட குறையாது” – திமுகவிற்கு ஆதவ் அர்ஜுனா விட்ட பகிரங்க சவால்..!!
“வைகோ, திருமாவளவன் அண்ணன்களின் பேச்சை தேடித் தேடிப் பார்த்த நான், இன்றைக்கு அவர்கள் முன்னிலையிலேயே ஒரு மாணவனைப் போலப் பேசுகிறேன்; எனக்கு இன்னும் அமைச்சரான ஃபீலிங்கே வரவில்லை” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். மேடையில் இருந்த வைகோவைப் பார்த்து, “அவரு கண்ண பாருய்யா; எப்படி இருக்கு…” என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்திய அவர், தங்களுக்குத் தவறான ஆலோசனைகள் வழங்கப்படுவதாகக் கூறி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என வைகோவிற்குப் பகிரங்கமாக அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அங்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி நீதிமன்றத்தை நாடப்போவதாக அக்கட்சி அறிவித்திருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “எதிராளிகள் கிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க வைகோ அண்ணா, அங்க பேசுற அளவுக்கு ஆப்போசிட்ல யாரும் இல்லை; கொளத்தூரில் எத்தனை ரீ-கவுண்ட் வேணா கேட்கட்டும், எங்களுடைய 1 ஓட்டு கூட குறையாது” என அதிரடியாகச் சவால் விடுத்துள்ளார்.
ஒருவேளை கொளத்தூர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டால், தவெக வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் 9 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக உயருமே தவிர குறையாது என்றும், யாரோ தவறான அட்வைஸ் செய்ததால் தான் இந்த விவகாரம் பெரிதாக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோரைத் தங்களின் குடும்பப் பெரியவர்களாக மதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்தரப்பினரின் தேவையற்ற அரசியல் விமர்சனங்களுக்குப் பதில் அளித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனத் தனது உரையில் ஆவேசமாகவும் அதே சமயம் நெகிழ்ச்சியாகவும் பேசியுள்ளார்.
