LATEST NEWS
“குருவி தயாரிப்பாளர் துணை முதல்வர் ஆகலாம்… ஆனா பிகில் தயாரிப்பாளர் கூடாதா..?” தவெகவின் அதிரடி பதிலால் சூடேறிய அரசியல் களம்..!!
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களைத் தேர்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள புதிய மாநிலக் குழுவில், ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் மற்றும் சமூக வலைதள வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. விஜய் நடித்த ‘பிகில்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் என்பதையும், தவெக தலைவர் விஜய்க்குச் நெருக்கமானவர் எனக் கருதப்படுவதையும் சுட்டிக்காட்டி சில அரசியல் விமர்சகர்கள் இந்த நியமனத்திற்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் அர்ச்சனா கல்பாத்தியின் தனிப்பட்ட நிர்வாகத் திறமைகளையும் கல்வித் தகுதியையும் முதன்மைப்படுத்திப் பேசி வருகின்றனர். சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் செல்வ மேலாண்மை படிப்பை முடித்த அர்ச்சனா, கார்ப்பரேட் துறையிலும் சினிமா தயாரிப்பிலும் மிகச் சிறந்த நிர்வாகத் திறனை நிரூபித்துள்ளார். வெறும் ஆன்மீகம் சார்ந்த தலங்களாக மட்டுமின்றி, கோடிக்கணக்கான ரூபாய் நிதியையும் சொத்துகளையும் நிர்வகிக்கும் கோவில் அறக்கட்டளைகளுக்கு இவரைப் போன்ற நிதி மேலாண்மை படித்த கார்ப்பரேட் வல்லுநர்களின் பங்களிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று வாதிடப்படுகிறது.
மேலும், விஜய் நடித்த ‘குருவி’ படத்தை தயாரித்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் வர இயலும் போது, ‘பிகில்’ படத்தைத் தயாரித்தவர் ஒரு அறங்காவலர் தேர்வுக்குழுவில் இடம்பெறக் கூடாதா என்ற நியாயமான கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர். கடந்த காலங்களில் கலைஞர் கருணாநிதிக்கு ஆதரவாகப் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் போன்ற ஆன்மீகப் பெரியோர்களும் அறநிலையத்துறை சார்ந்த குழுக்களில் இடம்பெற்ற வரலாற்றுச் சான்றுகளைச் சுட்டிக்காட்டும் தவெக ஆதரவாளர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மட்டுமே அர்ச்சனா கல்பாத்தியின் திறமையை மறுக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
