LATEST NEWS
காவிரி விவகாரத்தில் அடுத்த அதிரடி திருப்பம்..! “தமிழகத்திற்கு தினமும் 12,000 கனஅடி நீர் திறக்க முடியாது…” உச்சநீதிமன்றத்தை நாட கர்நாடக அரசு தீவிர முடிவு..!!
கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இடையே காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் நீண்டகாலமாகப் பிரச்சினை நீடித்து வருகிறது. முன்னதாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் 4 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக கர்நாடகத்தில் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து நீர்வரத்து அதிகரித்ததால் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு போராட்டங்கள் கைவிடப்பட்டன. இந்த நிலையில், டெல்லியில் நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க மீண்டும் உத்தரவிடப்பட்டது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த புதிய உத்தரவு குறித்துப் பேசிய கர்நாடக மந்திரி ராமலிங்க ரெட்டி, தமிழ்நாட்டிற்கு தினமும் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடுவது மிகவும் கடினம் என்று தெரிவித்துள்ளார். ஆணையத்தின் உத்தரவு குறித்து துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருடன் விரிவாக ஆலோசனை நடத்தியதாகக் கூறிய அவர், முன்னதாக வினாடிக்கு 3,500 கனஅடி நீரைத் திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடிந்ததாகவும், ஆனால் தற்போது 15 நாட்களுக்குத் தினமும் 12,000 கனஅடி நீர் (மொத்தம் 16 டி.எம்.சி.) திறக்கச் சொல்லியிருப்பது கர்நாடகாவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். மேலும் தங்கள் மாநிலத்தில் நிலத்தடி நீர்மட்டம் மிகக் குறைவாக உள்ள சூழலில் இவ்வளவு பெரிய அளவிலான நீரை விடுவிப்பது இயலாத காரியம் என்றார்.
மேலும், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசின் சார்பில் வழக்கறிஞர்களும் நிபுணர்களும் வலுவான வாதங்களை முன்வைத்த போதிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மந்திரி ராமலிங்க ரெட்டி, அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறினார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைதான் உள்ளதாகவும், கர்நாடக முதலமைச்சர் இது குறித்து டெல்லியில் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் நிபுணர்களிடம் பேசியுள்ளதாகவும் கூறிய அவர், மாநிலத்திற்கு எந்தவித அநீதியும் இழைக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.
