LATEST NEWS
படித்தவர்கள் வாழும் பகுதியில் 75%… ஆனா ரெட் லைட் ஏரியாவில் 92% ஓட்டு..!” மேடையில் உண்மையை உடைத்து அதிரவைத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி..!!
படித்த மக்கள் வாழும் பகுதிகளை விடக் குற்றப் பின்னணி கொண்டவர்கள் மற்றும் சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ள இடங்களில் இருந்தே தனக்கு அதிக வாக்குகள் கிடைப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாக்பூரில் உள்ள மிகவும் படித்த மக்கள் வாழும் பகுதிகளில் தனக்கு 70% முதல் 75% வரை மட்டுமே வாக்குகள் கிடைத்ததாகவும், அதே நேரத்தில் குற்றப் பின்னணி, பாதாள உலகத் தொடர்புகள் மற்றும் சிவப்பு விளக்கு பகுதிகள் நிறைந்த இடங்களில் 92% வாக்குகள் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதற்கான காரணத்தை விளக்கிய அவர், “நான் அரசியலில் நல்லவை, கெட்டவை என அனைத்தையும் பரிசோதித்துப் பார்த்துவிட்டேன். அப்பகுதிகளுக்குச் சாலை வசதிகளை அமைத்துத் தந்து, பல்வேறு சமூக நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டதால் தான் மக்கள் வாக்களித்தார்களே தவிர, நான் குற்றச்செயல்களுக்கு ஆதரவளிப்பதாக இதன் பொருள் அல்ல” என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், வாக்காளர்கள் மிகவும் புத்திசாலிகள் என்றும், அவர்கள் இலவசங்களைப் பெற்றுக்கொண்டாலும், தங்களுக்கு யார் உண்மையாக வேலை செய்வார்கள் என்பதைப் புரிந்து கொண்டுதான் வாக்களிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் தேர்தலில் போட்டியிட்டபோது வாக்காளர்களுக்கு தலா 1 கிலோ ஆட்டிறைச்சி வழங்கியதாகவும், ஆனால் அந்தத் தேர்தலில் தான் தோல்வியடைந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார். கடந்த 2024 மக்களவை தேர்தலில் நாக்பூர் தொகுதியில் நிதின் கட்கரி தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விகாஸ் தாக்கரேவை விட சுமார் 1 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
