LATEST NEWS
“தி.மு.க ஆட்சியில் 3 முறை தள்ளுபடி..?” மேகதாது விவகாரத்தில் ஆதவ் எழுப்பிய அதிரடி கேள்வி.. நெத்தியடி பதிலளித்த கே.என்.நேரு.. கூட்டத்தொடரில் உச்சகட்ட பரபரப்பு..!!
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில், கர்நாடகாவின் மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இந்தத் தீர்மானத்தைச் சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து அவையில் விவாதம் தொடங்கியது. விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் உரையில் தவறான தகவல்களைக் குறிப்பிட்டதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், முதல்வர் விஜய் விவசாயிகளைச் சந்திக்கவில்லை என்ற கூற்றை மறுத்த அவர், இன்று பிற்பகலில் டெல்டா விவசாய சங்க பிரதிநிதிகளை முதல்வர் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முந்தைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மேகதாது அணை விவகாரத்தில் தொடரப்பட்ட மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் மூன்று முறை தள்ளுபடி செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.
திமுக அரசு வலுவாக வாதிடாததே இதற்குக் காரணம் எனக் கூறிய அவர், எதற்காக இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பதற்கான விளக்கத்தை எதிர்க்கட்சித் தலைவர் வழங்க வேண்டும் என்றும், நாங்கள் தற்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ளோம் என்றும் குறிப்பிட்டுக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய திமுக எம்.எல்.ஏ கே.என்.நேரு, உச்சநீதிமன்றம் மறுசீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்யவில்லை என்றும், கூடுதல் அவகாசம் எடுத்துக்கொண்டு வருமாறு மட்டுமே தெரிவித்தது என்றும் விளக்கம் அளித்தார். மேலும், மேகதாது விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டிய சூழலில் வேறுபாடுகளைப் பேசக் கூடாது எனக் கூறிய அவர், இப் பிரச்சினையில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனுக்குடன் உரிய நடவடிக்கைகளை எடுத்ததே வரலாறு என்றும் அவையில் பதிவு செய்தார்.
