LATEST NEWS
ஆட்டம் ஆரம்பம்.! அரசு அலுவலகங்களில் உளவுத்துறை ரகசிய வேட்டை… லஞ்ச அதிகாரிகளின் பட்டியல் தயார்… அதிரடியாக உத்தரவிட்ட விஜய்..!!
தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு கடுமையான தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு சேவைகளைப் பெற பொதுமக்கள் லஞ்சமோ அல்லது கட்சி நிதியோ வழங்கத் தேவையில்லை என்பதை வலியுறுத்தியுள்ள அரசு, அரசு அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கப் பிரத்யேக வாட்ஸ்அப் எண்களை அறிமுகம் செய்து, உளவுத்துறையைக் களமிறக்கி இரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இருப்பினும், அரசு அலுவலகங்களின் கீழ்மட்டத்தில் லஞ்சம் புதிய மாற்று வடிவங்களில் தொடர்வதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. கடந்த காலங்களில் பணம் செலுத்தி உயர் பதவிகளையும் பணி மாறுதல்களையும் பெற்ற சில உயர் அதிகாரிகள், அந்த இழப்பை ஈடுசெய்வதற்காகக் கீழ்நிலை ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், ரொக்கப் பணத்திற்குப் பதிலாக நகைக் கடைகளில் பயன்படுத்தக்கூடிய சிறப்புக் கூப்பன்களை லஞ்சமாகப் பெறும் புதிய முறைகள் சில இடங்களில் பின்பற்றப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாகப் பொதுமக்கள் அதிகம் அணுகும் பத்திரப்பதிவுத் துறை, மின்சார வாரியம், வருவாய்த்துறை, நில அளவைத் துறை, நகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் இத்தகைய புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களின் உண்மைத் தன்மையை ஆராயவும், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் அரசு அதிகாரிகளைக் கண்டறியவும் உளவுத்துறை தனது கண்காணிப்பு வளையத்தைப் பல துறைகளிலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக RDO, RTO, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஊழல் குற்றச்சாட்டுகள் நிலவும் அதிகாரிகளின் பட்டியலைச் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக ஒரே அலுவலகத்தில் பணியாற்றித் தங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொண்ட அதிகாரிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், உளவுத்துறை சமர்ப்பிக்கும் ரகசிய அறிக்கையின் அடிப்படையில் அதிரடி இடமாற்றங்களும் துறைரீதியான நடவடிக்கைகளும் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
