LATEST NEWS
“அழகு கிரீம் போட்டதால் கிட்னி ஃபெயிலியர்” 18 இந்திய பெண்களுக்கு நேர்ந்த பயங்கரம்.. பாகிஸ்தான் தயாரிப்புகளுக்கு மத்திய அரசு அதிரடித் தடை..!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட அழகுசாதன கிரீம்களைப் பயன்படுத்திய 18 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குக் கடுமையான சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள உள்ளூர் கடைகள் மற்றும் ஆன்லைன் மூலமாக உரிய அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்ட ‘கோரி பியூட்டி கிரீம்’ மற்றும் ‘சாந்தினி ஒயிட்டனிங் கிரீம்’ ஆகியவற்றை வாங்கியே இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதித்த மருத்துவக் குழுவினர், அவர்களின் உடலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட சுமார் 100 முதல் 105 மடங்கு அதிகமாக நச்சுத்தன்மை வாய்ந்த ‘பாதரசம்’ கலந்திருப்பதை உறுதி செய்துள்ளனர்.
இந்த நச்சுத்தன்மையின் காரணமாகப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ‘மெம்ப்ரேனஸ் நெஃப்ரோபதி’ என்ற கடுமையான சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாக்பூரைச் சேர்ந்த சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் மோனாலி சாஹூ இதுகுறித்துக் கூறுகையில், இந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து அதிகளவிலான முக்கியப் புரதங்கள் சிறுநீர் வழியாகத் தொடர்ச்சியாக வெளியேறி வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் உடலில் புரத ஆண்டிஜென் ஆன ‘NELL-1’ தொற்றும் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள நாக்பூர் போலீசார், உரிய அரசு அனுமதியின்றி இந்த ஆபத்தான பொருட்கள் எவ்வாறு சந்தைக்கு வந்தன என்பது குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் தேசிய அளவில் வெடித்ததைத் தொடர்ந்து, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்தியாவில் இந்த இரண்டு பாகிஸ்தான் கிரீம்களின் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு அதிரடித் தடை விதித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் யாரும் இந்த அங்கீகரிக்கப்படாத அழகுசாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே இவற்றைத் தற்காலிகமாகப் பயன்படுத்தியவர்கள் தங்களது முகம் அல்லது கால்களில் வீக்கம் ஏற்படுதல், வழக்கத்திற்கு மாறாகச் சிறுநீரில் நுரை தள்ளுதல், கடுமையான சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவற்றைச் சாதாரணமாக எண்ணிப் புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதிக்க வேண்டும் என்றும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
