LATEST NEWS
டிரெண்டிங் லவ் ஸ்டோரி..! பிஸியான வாழ்க்கைக்கு நடுவே “90 செகண்ட் காதல்”… ஏர்போர்ட்டில் ‘யெஸ் மேடம்’ சிஇஓ-வுக்கு அமைந்த நெகிழ்ச்சியான நொடி..!!
பிரபல அழகு கலை சேவை நிறுவனமான ‘யெஸ் மேடம்’ கூட்டு நிறுவனரும், சிஇஓ-வுமான ஆதித்யா ஆர்யாவின் மாறுபட்ட காதல் கதை இணையத்தில் வைரலாகி பலரின் இதயங்களை வென்றுள்ளது. தொழிலதிபர்களாக இருக்கும் தம்பதியினர் தங்களது பிஸியான பணிச்சூழலுக்கு மத்தியிலும், எவ்வாறு காதலைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் இவரது பதிவு அமைந்துள்ளது. ஆதித்யா ஆர்யா தனது லிங்க்ட்இன் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து இந்தச் சுவாரசியமான கதையை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் பதிவிட்ட கதையின்படி, ஒரு நாள் அவரது மனைவியின் விமானம் ஒரு விமான நிலையத்தில் வந்து இறங்கிய அதே நேரத்தில், ஆதித்யா மற்றொரு விமானத்தைப் பிடிப்பதற்காக அதே விமான நிலையத்தின் நுழைவு வாயில் பகுதிக்கு வந்துள்ளார். வெவ்வேறு பயணங்களில் இருந்த இந்த தம்பதியினர் எதிர்பாராதவிதமாக அங்கு சந்தித்துக் கொண்டபோது, அவர்கள் ஒன்றாகக் கழிக்க வெறும் 90 விநாடிகள் (ஒன்றரை நிமிடம்) மட்டுமே கிடைத்துள்ளது. அந்த மிகக் குறுகிய நேரத்தில் இருவரும் கைகளைப் பிடித்துக்கொண்டு, புன்னகைத்து, சில வார்த்தைகள் மட்டுமே பேசிய போதிலும், அந்த நொடி தங்களது நாள் முழுவதையும் அழகாக்கிவிட்டதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அவரது மனைவியும், நிறுவனத்தின் மற்றொரு கூட்டு நிறுவனருமான கரிமா சர்மா இப்பதிவிற்கு உருக்கமாகப் பதிலளித்துள்ளார். மற்றவர்களுக்கு இது விநோதமாகத் தோன்றினாலும், தங்களுக்கு இதுதான் நிஜமான காதல் என்றும், காதலின் ஆழம் ஒன்றாகக் கழிக்கும் நேரத்தின் நீளத்தில் இல்லை, மாறாகக் கிடைக்கும் சில நிமிடங்களை எவ்வளவு உண்மையாகவும் அன்பாகவும் வாழ்கிறோம் என்பதில் தான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 9 ஆண்டுகால இவர்களது இந்தத் திருமண வாழ்க்கை, இன்றைய நவீன உலகில் வேலைக்கும் குடும்பத்திற்கும் இடையே உள்ள சமநிலையை அழகாக விளக்குவதாகப் பாராட்டி இணையவாசிகள் இந்த வீடியோ மற்றும் பதிவை வைரலாக்கி வருகின்றனர்.
