CRIME
“என் மகளுக்குப் பாம்பு கடிச்சப்போவே தெரிஞ்சிருந்தா… என் மகனை காப்பாத்தியிருப்பேனே” நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து அக்கா-தம்பியை வேட்டையாடிய கொடிய கட்டுவிரியன்… தாயின் நெஞ்சை உலுக்கும் கதறல்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பராகாவ்ன் பகுதியில் உள்ள ஹர்தௌல்புராவில், தூங்கிக் கொண்டிருந்த அக்கா-தம்பி இருவரை கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு கடித்ததில், 7 வயது சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு இந்த வீட்டின் உள்ளே இரண்டு பாம்புகள் புகுந்த நிலையில், அங்கிருந்தவர்கள் ஒரு பாம்பை மட்டும் அடித்துக் கொன்றுள்ளனர், மற்றொரு பாம்பு தப்பியோடியுள்ளது. இந்நிலையில், நேகா குஷ்வாகா என்ற தாய், தப்பிச் சென்ற அதே அறையில் தன் ஒரே மகனான மயங்க் (7) மற்றும் மகள் பிரகதி (5) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் மகள் பிரகதி திடீரென அலறி அழவே, விழித்தெழுந்த தாய் அவளை உடனடியாக வெளியே தூக்கிச் சென்றுள்ளார். அப்போது அது பாம்புக்கடி என்று தெரியாத நிலையில், குழந்தையின் உடலில் இருந்த தழும்பைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் அறையின் உள்ளே இருந்து மகன் மயங்க்கின் அலறல் சத்தமும் கேட்கவே, ஓடிச் சென்று பார்த்தபோது அந்தப் பாம்பு சிறுவனின் மேல் சுருண்டு அமர்ந்திருந்ததைக் கண்டு குடும்பத்தினர் உறைந்து போயினர். அந்தப் பாம்பை விரட்டிவிட்டு சிறுவனை மீட்டபோது, அது அவனது உடலில் நான்கு இடங்களில் கடித்திருந்தது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளையும் குடும்பத்தினர் உடனடியாக ஜான்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றனர். எனினும், வீரியமிக்க கட்டுவிரியன் பாம்பின் விஷம் உடல் முழுவதும் பரவியதால், சிறுவன் மயங்க் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். அவனது சகோதரி பிரகதி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் உயிருக்குப் போராடி வருகிறாள். “என் மகளுக்குப் பாம்பு கடித்தபோதே இந்த விஷயம் தெரிந்திருந்தால், என் மகனையும் சேர்த்தே நான் காப்பாற்றியிருப்பேனே” என்று அந்தத் தாய் கதறி அழுவது பார்ப்போரைக் கண்கலங்க வைத்துள்ளது
