CRIME
என்ன ஆனது அந்த சிறுமிகளுக்கு..?! ஒரே நாளில் திடீரென மடிந்த 3 பிஞ்சு உயிர்கள்… சத்தர்பூரை உலுக்கிய மர்ம மரணம்… பின்னணியில் ஒளிந்திருக்கும் திடுக்கிடும் உண்மை..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம், மாத்காவ் காவல் எல்லைக்குட்பட்ட பிபௌரா குர்து கிராமத்தைச் சேர்ந்த பாலமுகுந்த் குஷ்வாஹா என்பவருக்கு மொத்தம் ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் பூனம் குஷ்வாஹா, மனிஷா குஷ்வாஹா மற்றும் சாஹத் குஷ்வாஹா ஆகிய மூன்று பெண் குழந்தைகள் திடீரென உடல்நலம் குன்றியதால், சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரே நேரத்தில் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண் குழந்தைகளின் உடல்கள் ஒரே நேரத்தில் தூக்கிச் செல்லப்பட்ட இந்த கொடூர சம்பவத்தால், பெற்றோர் கதறித் துடிப்பதோடு, கிராமம் முழுவதுமே பேரதிர்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கியுள்ளது.
சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை ஆகிய அமைப்புகளின் கூட்டுத் குழு உடனடியாகப் பிபௌரா குர்து கிராமத்தை வந்தடைந்தது. வட்டாட்சியர் துர்கேஷ் திவாரி, ஈசாநகர் காவல் ஆய்வாளர் ரிபுதமன் சிங் ராஜ்புத் மற்றும் மாத்காவ் காவல் ஆய்வாளர் அங்கூர் சௌபே ஆகியோர் சுகாதாரக் குழு மற்றும் தடயவியல் குழுவுடன் நேரில் சென்று சம்பவ இடத்தை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தனர். தடயவியல் குழுவினர் வழக்கிற்குத் தேவையான முக்கிய ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர்.
சிறுமிகளின் மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் தெளிவாக வெளிவரவில்லை என்பதால், இச்சம்பவம் ஒரு புதிராகவே நீடிக்கிறது. சிறுமிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட அவர்கள் ஏதேனும் விஷப் பொருட்களை உட்கொண்டார்களா என்ற கோணத்திலும் காவல்துறை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராமவாசிகளிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவப் பரிசோதனை, விசெரா மாதிரிகள் ஆய்வு மற்றும் உடற்கூறாய்வு அறிக்கைகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
