LATEST NEWS
“மன்னிப்பு கேட்கும் தைரியம் இருக்கா..?!” உதயநிதிக்கு பகிரங்க சவால் விட்ட குஷ்பு… . சூடாகும் அரசியல் களம்..!!
சென்னை மற்றும் தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், கட்சியின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாகக் கூறப்படும் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சுக்குத் தவெக கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தவெக மகளிர் அணி சார்பில் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திலும் தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் தஞ்சை காவல்துறையினர் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்குப்பதிவைத் தொடர்ந்து, தஞ்சை மற்றும் சென்னை காவல்துறையினர் இணைந்த சிறப்புப் படையினர், சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் அவரை அதிரடியாகக் கைது செய்த காவல்துறையினர், கூடுதல் விசாரணைக்காக வாகனத்தில் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் தமிழக அரசியல் களம் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில், நடிகையும் பாஜக மாநிலத் துணைத் தலைவருமான குஷ்பு, உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். பொது மேடையில் பெண் என்றும் பாராமல் நடிகை திரிஷாவை அவமதித்துவிட்டதாகக் குற்றம்சாட்டிய அவர், “செய்த தவறை ஒப்புக்கொண்டு திரிஷாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் தைரியமும் கண்ணியமும் உதயநிதியிடம் உள்ளதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” எனத் தனது கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.
