LATEST NEWS
“சார் தப்பா சொல்லிகுடுக்குறீங்க” கணக்கு ஆசிரியரிடம் தவறை சுட்டிக்காட்டிய மாணவன்.. அடித்த அடியில் காதின் ஜவ்வு கிழிந்தது… தருமபுரியில் அதிர்ச்சி..!!
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மொரப்பூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், கணக்கு ஆசிரியர் நடத்திய பாடத்தில் இருந்த தவறைச் சுட்டிக்காட்டிய பிளஸ் 1 மாணவன் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். கணித ஆசிரியர் மதிவாணன் கரும்பலகையில் கணக்கைத் தவறாக எழுதியபோது, வகுப்பிலிருந்த மாணவர்கள் “சார், இது தவறு” எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் கடுமையான ஆத்திரமடைந்த ஆசிரியர் மதிவாணன், அனைத்து மாணவர்களின் முன்னிலையிலும் அந்த குறிப்பிட்ட மாணவனை மட்டும் தனியாக அழைத்து கன்னத்திலும் காதிலும் பலமாக அறைந்துள்ளார். இந்தத் தாக்குதலில் மாணவனின் காதிலிருந்து ரத்தம் கொட்டியதை அடுத்து, அவர் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஆசிரியர் அடித்த பலத்த அடியில் மாணவனின் காது ஜவ்வு கிழிந்திருப்பதை உறுதி செய்துள்ளனர்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை விதிகளின்படியும், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படியும் மாணவர்களை உடல் ரீதியாகத் தண்டிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கடுமையான காயம் ஏற்படுத்துதல் (BNS பிரிவு 118(1)) மற்றும் குழந்தைகளைத் துன்புறுத்துதல் (ஜே.ஜே சட்டம் பிரிவு 75) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் தவறிழைத்த ஆசிரியர் மீது காவல்துறை மற்றும் கல்வித்துறை ரீதியாகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
