LATEST NEWS
“2007-ல் கைது செய்யச் சொன்ன அதே சபை… இன்று அமைச்சர் இருக்கை..!” இது கன்னி உரை அல்ல.. வன்னி உரை சட்டசபையில் அமைச்சர் வன்னி அரசு அதிரடி பேச்சு..!!
சமூகநீதி துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் மீது அமைச்சர் வன்னி அரசு பதிலளித்து பேசினார். அப்போது, சட்டசபையில் இன்று நான் பேசுவது கன்னி உரையல்ல, வன்னி உரை என தனது உரையைத் தொடங்கினார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்ததால் ‘திருமாவளவனை கைது செய், வன்னி அரசை கைது செய்’ என 2007-ல் சட்டசபையில் முழக்கமிட்ட அதே சபையில், என்னை அமரவைத்து அழகு பார்த்திருக்கிறார் திருமாவளவன் என்று கூறிய அவர், சாதிய ஒழிப்பு மற்றும் தமிழீழ விடுதலைக் களத்தில் என்றுமே நான் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், தீக்கிரையாக்கப்பட்ட குடிசைகளின் சாம்பலில் இருந்து வந்தவன் நான் என்றும் குறிப்பிட்டார். மேலும், பதவிக்காகவோ பரிசுக்காகவோ அரசியலுக்கு வரவில்லை எனத் தெரிவித்த அவர், அமைச்சர் இருக்கையில் அமர வைத்த திருமாவளவன் நாளையே அழைத்தாலும் போராட்டக் களத்திற்குச் சென்றுவிடுவேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது வெற்றியை விட வன்னி அரசின் வெற்றிதான் முக்கியமானது எனத் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும், தங்கம் தென்னரசு, கனிமொழி, எ.வ.வேலு உள்ளிட்ட திமுக உறுப்பினர்களுக்கும், தமிழ்நாட்டின் முக்கிய ஊடகங்களுக்கும், தேர்தல் வெற்றிக்காக உழைத்த பாமக நிர்வாகிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். கூட்டணியில் வெற்றி கிடைக்கும்போது அது இருதரப்புக்கும் பொருந்தும், நாங்கள் நன்றி கூறிவிட்டோம்; ஆனால் எங்களுக்கு யாரும் இதுவரை நன்றி கூறவில்லை எனக் குறிப்பிட்ட நிலையில், “திருமாவளவனுக்கும் எனக்கும் இருந்த உறவு அண்ணன் தம்பி போன்றது, மு.க.ஸ்டாலினுக்கும் திருமாவளவனுக்கும் இடையிலானது கொள்கைக் கூட்டணி; என் அரசியல் ஆசான் திருமாவளவனுக்கு நன்றி” என உதயநிதி ஸ்டாலின் கூறியதும், முதன்முறையாக நன்றி கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டார்.
தமிழ்த்தேசிய பேரியக்கம் தவெக ஆட்சியில் இடம்பெற்றிருப்பது மிகப்பெரிய வரலாறு என்றும், அமைச்சர்கள் மானியக்கோரிக்கை மீது பேசுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம், இன்று எங்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் வன்னி அரசு கூறினார். எங்கள் இலக்கு என்பது சமூகநீதி மற்றும் சமத்துவம், அதன் அடிப்படையில்தான் தவெக அமைச்சரவையில் பங்கு பெற்றுள்ளோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பொதுத்தொகுதியில் தலித்தை நிறுத்தவிடமாட்டோம் எனக் கூறுபவர்களுக்குப் பதிலளித்த அவர், 234 தொகுதிகளிலும் போட்டியிட சட்டத்தில் இடமுண்டு என்று தனது உரையில் தெளிவாக வலியுறுத்தினார்.
