LATEST NEWS
வீர மண்ணில் விளைந்த துரோகம்…!பத்தான்கோட் எல்லையில் உளவு நெட்வொர்க் காலி…!இந்திய ராணுவத்தின் அசைவுகளை பாகிஸ்தானுக்கு ‘லைவ் ஸ்ட்ரீமிங்’ செய்த சீன கேமராக்கள்…!
இந்திய ராணுவத்திற்கு அதிகப்படியான வீரர்களை வழங்கி, நாட்டின் எல்லையைக் காப்பதில் எப்போதுமே முதன்மை மாநிலமாகத் திகழ்வது பஞ்சாப் ஆகும். அத்தகைய வீர மண்ணில், ஒரு சிலர் பணத்திற்காகப் பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கும் தேசவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ளது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பகுதியான பத்தான்கோட்டில் இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் நடமாட்டங்களைக் கண்காணித்து, அந்தத் தகவல்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தி வந்த ஒரு ஆபத்தான உளவு நெட்வொர்க்கை பஞ்சாப் போலீசார் தங்களின் அதிரடி நடவடிக்கையால் தற்போது முறியடித்துள்ளனர்.
பத்தான்கோட் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பாலத்தின் அருகில், சந்தேகத்திற்குரிய வகையில் சிசிடிவி கேமரா மூலம் ராணுவ நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் சுஜான்பூர் போலீசார் நடத்திய மின்னல் வேகச் சோதனையில், சக் தரிவால் கிராமத்தைச் சேர்ந்தபல்ஜித் சிங் (என்ற பிட்டு) என்பவர் கைது செய்யப்பட்டார். துபாயில் உள்ள அடையாளம் தெரியாத ஒரு நபர் கொடுத்த 40,000 ரூபாய் பணத்திற்காக, இணைய வசதியுடன் கூடிய சிசிடிவி கேமராவை நெடுஞ்சாலையில் பொருத்தி ராணுவக் கான்வாய்களின் நடமாட்டத்தை அவர் பாகிஸ்தானுக்குக் கடத்தியது விசாரணையில் அம்பலமானது. இந்த விவகாரத்தில் பல்ஜித் சிங் தவிர விக்ரம்ஜித் சிங், பால்விந்தர் சிங், தரன்பிரீத் சிங் ஆகிய மேலும் மூன்று பேர் மீதும் தேசவிரோதச் சட்டத்தின் கீழ் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
பத்தான்கோட் சம்பவம் ஒருபுறமிருக்க, கடந்த மாதம் ஜலந்தர் மற்றும் கபுர்தலா ஆகிய இடங்களிலும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ (ISI) பின்னணியுடன் இயங்கி வந்த இரண்டு மிகப்பெரிய ஹைடெக் உளவு முயற்சிகளைப் போலீசார் முறியடித்தனர். தேசவிரோதிகள் சிலர் ராணுவக் குடியிருப்புகள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படைத் தளங்களுக்கு அருகில், சீன தயாரிப்பு சோலார் 4G சிம் கேமராக்களைக் கம்பங்களில் ரகசியமாகப் பொருத்தி உளவு பார்த்துள்ளனர். இந்தச் சீன கேமராக்கள் சூரிய ஒளி மற்றும் 4G தொழில்நுட்பம் மூலம் இயங்குவதால், அவற்றுக்குத் தனியாக மின்சார வயரிங் எதுவும் தேவையில்லை; இதனால் யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதன் மூலம் ராணுவ அசைவுகள் அனைத்தையும் மொபைல் ஆப் வழியாகப் பாகிஸ்தானில் உள்ள ஏஜெண்டுகளுக்கு அவர்கள் ‘லைவ் ஸ்ட்ரீமிங்’ செய்துள்ளனர்.
கபுர்தலாவில் பிடிபட்ட இவர்களுக்குப் பின்னணியில் ‘பௌஜி’ என்ற பாகிஸ்தான் ஏஜெண்டு இருந்துள்ளார். கேமரா பொருத்த 35,000 ரூபாய் கொடுத்தது மட்டுமின்றி, ட்ரோன்கள் மூலம் எல்லை தாண்டி ஹெராயின் போதைப்பொருள் விநியோகத்திலும் அவர் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்குகளில் பெரோஸ்பூரைச் சேர்ந்த சுக்விந்தர் சிங், சோனா மற்றும் சந்தீப் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழில்நுட்ப முன்னேற்றம் மனிதனுக்கு எவ்வளவு நன்மையோ, அவ்வளவு ஆபத்து என்பதற்கு இந்தச் சம்பவங்களே சாட்சி. எல்லையில் நமது ராணுவத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத பாகிஸ்தான், கோழைத்தனமாக சோலார் 4G கேமராக்கள் மற்றும் உள்ளூர் துரோகிகளை வைத்து இந்தியாவைக் கண்காணிக்க முயன்றாலும், இந்தியப் பாதுகாப்புப் படைகள் அதைத் துணிச்சலுடன் முறியடித்து வருகின்றன.
