CRIME
“ஐயோ என்ன கொடுமை இது!.. பட்டியலில் என் பெயர் இல்லையா..?”விவசாயி எடுத்த விபரீத முடிவு.. கதறித் துடிக்கும் குடும்பம்.. பதறவைக்கும் பின்னணி..!
மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டம், பாம்ப் கிராத்தைச் சேர்ந்த 49 வயதான ராஜு பாபுராவ் சுட்டுக்கே என்ற விவசாயி, அரசின் கடன் தள்ளுபடி பட்டியலில் தனது பெயர் விடுபட்டதால் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1 ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்து வந்த இவர், கடன் சுமையிலிருந்து மீள அரசின் உதவி கிட்டும் என்ற நம்பிக்கையில் வங்கியின் பட்டியலைச் சரிபார்க்கச் சென்றுள்ளார். ஆனால், பட்டியலில் பெயர் இல்லாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானவர், சனிக்கிழமை இரவு வீட்டில் விஷம் அருந்திய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதிகரித்து வரும் உரங்கள் மற்றும் விதைகளின் விலை, தொடர் வறட்சி ஆகியவற்றால் ஏற்கனவே நிதி நெருக்கடியில் தவித்த அவரது குடும்பத்திற்கு இந்த கடன் தள்ளுபடி மட்டுமே ஒரே நம்பிக்கையாக இருந்துள்ளது. உயிரிழந்த விவசாயிக்கு மனைவியும் இரண்டு சிறு குழந்தைகளும் உள்ள நிலையில், போதிய நிவாரணம் கிடைக்காத ஏமாற்றமே அவரை இந்த விபரீத முடிவுக்குத் தள்ளியதாகக் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாம்ப் கிராம மக்களிடையே பெரும் சோகமும் அதிகாரிகளின் மீது கடும் கோபமும் வெடித்துள்ளது. கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தகுதியான பல ஏழை விவசாயிகளின் பெயர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள உள்ளூர் மக்கள், இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும், கடன் தள்ளுபடி பட்டியலை மறுபரிசீலனை செய்து பாதிக்கப்பட்ட விவசாயியின் குடும்பத்திற்கு உடனடியாக அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
