LATEST NEWS
“என்னை எப்படியாவது காப்பாத்துங்க”.. 15 மணி நேர சித்திரவதை.. ஓமனில் ஐதராபாத் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கண்ணீர் மல்க வெளியிட்ட பகீர் வீடியோ..!!
ஐதராபாத்தைச் சேர்ந்த ஷப்னம் பேகம் என்ற இளம்பெண், மாதத்திற்கு ரூ.50,000 சம்பளத்தில் ஓமனில் வீட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டு, அங்கு நரக வேதனையை அநுபவித்து வரும் அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏஜெண்டின் ஆசை வார்த்தைகளை நம்பி கடந்த மார்ச் மாதம் ஓமன் சென்ற அவர், அங்குள்ள வீடுகளில் தினமும் 12 முதல் 15 மணி நேரம் வரை ஓய்வின்றி கட்டாய வேலை வாங்கப்பட்டுள்ளார். அவருக்குச் சரியான உணவோ, ஊதியமோ வழங்கப்படாமல், மொபைல் போனும் பறிக்கப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஒருவழியாக அங்கிருந்து தப்பித்து மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அவர் அடைந்த போதிலும், பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் ஏஜெண்டுகளிடம் உள்ளதால் இந்தியாவிற்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.
தன்னை மீட்கக் கோரி ஷப்னம் கண்ணீருடன் வீடியோ அனுப்பியதைத் தொடர்ந்து, ஐதராபாத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர் அம்ஜத் உல்லா கான் இந்த விவகாரத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். போலி ஏஜெண்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அந்தப் பெண்ணைப் பத்திரமாக மீட்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம், இந்த விவகாரம் தங்களின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், உரிய அதிகாரிகளின் மூலம் அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதி அளித்துள்ளது.
