LATEST NEWS
என்னப்பா இது பகல் கொள்ளையா இருக்கே..! ஐயோ என் வீட்ல “ஏசி, வாஷிங்மெஷின்” கூட இல்ல… ஆனா ரூ.14 ஆயிரம் மின் கட்டணம்… அம்பத்தூர் வியாபாரியை அலறவிட்ட ‘கரண்ட் பில்’ அதிர்ச்சி..!!
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த மளிகை வியாபாரி ஆசீர்வாதம் என்பவரது வீட்டிற்கு வழக்கமாக 800 ரூபாய் மட்டுமே மின்கட்டணம் வந்துள்ளது. அவரது வீட்டில் ஏ.சி, வாஷிங் மெஷின் போன்ற அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தும் உபகரணங்கள் எதுவும் இல்லாத சூழலில், இந்த மாதம் திடீரென 14,234 ரூபாய் கட்டணம் செலுத்தக் கோரி குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அவர், மின்கட்டணத்தில் ஏற்பட்டுள்ள இந்த அநியாய உயர்வு குறித்து மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பாகப் புகார் அளித்த தனக்கு மின்வாரிய ஊழியர்கள் முறையான பதிலளிக்கவில்லை என்று ஆசீர்வாதம் குற்றம் சாட்டியுள்ளார். வழக்கமாக எடுக்க வேண்டிய கால அவகாசத்தைத் தாண்டி, 70 நாட்களுக்குப் பிறகு மிகவும் தாமதமாக மின்வாரியத்தினர் ரீடிங் எடுத்ததே இவ்வளவு பெரிய தொகை வரக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த குளறுபடிக்குக் காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தனது மின்கட்டணப் பிரச்சினையைச் சீரமைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
