LATEST NEWS
“காலரைப் புடிச்சா அவ்வளவுதான்… ஃபோர்ஸைக் கூப்பிட்டு அடக்கிடுவேன்..!” உண்ணாவிரதப் போராட்டத்தில் அடிதடி.. கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குப் போலீஸ் போட்ட பகிரங்க கண்டிஷன்..! தீயாய் பரவும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களிடையே சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கோபமாகப் பேசி எச்சரிக்கை விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், பல்கலைக்கழகத்தின் காவல் சௌகி பொறுப்பாளரான அவிரல் மிஸ்ரா என்ற காவல் அதிகாரி, மாணவர்களைக் கடிந்துகொண்டு சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். “காலரைப் பிடிக்கும் அளவுக்குச் செல்லும் இந்தப் போராட்டம் எப்படி அமைதியான போராட்டமாகும்? பெரும் படையை வரவழைத்து அனைவரையும் அடக்கிவிடுவேன்” என்று அவர் மாணவர்களை அச்சுறுத்தும் தொனியில் எச்சரிப்பதாக அந்த வீடியோவில் காட்சிப் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் செப்டம்பர் 8 அன்று கோரக்பூர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தின் முன் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட சில மாணவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பல்கலைக்கழகத்தின் உதவிப் புரோக்டர் வேத் பிரகாஷ் ராய் உட்பட பிற அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். பேச்சுவார்த்தையின் போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, சில மாணவர்கள் ஆத்திரமடைந்து உதவிப் புரோக்டரைத் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த அவர் கீழே விழுந்ததை அடுத்து, பாதுகாப்பு ஊழியர்கள் அவரைப் பாதுகாப்பாக மீட்டுச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சூழ்நிலையைக் கட்டுப்படுத்த முயன்றனர். அப்போதுதான் அந்தச் சப்-இன்ஸ்பெக்டர், போராட்டத்தின் பெயரில் வன்முறையில் ஈடுபட்டால் அதை அமைதியான போராட்டமாகக் கருத முடியாது எனக் கூறி மாணவர்களைக் கடுமையாக எச்சரித்தார். இந்தத் வீடியோ வைரலானதை அடுத்து விளக்கம் அளித்துள்ள காவல் துறை, உதவிப் புரோக்டரை மாணவர்கள் தாக்க முயன்றபோதே காவலர்கள் தலையிட்டு அவரைப் பாதுகாத்ததாகத் தெரிவித்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
