LATEST NEWS
18 வயதுக்கு கம்மியா…? இனி பேரண்ட்ஸ் பெர்மிஷன் இல்லாம கண்டபடி சோஷியல் மீடியா யூஸ் பண்ண முடியாது…உச்ச நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை..!!
18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்களின் அனுமதியின்றி சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் சுயாதீனமாக கணக்குகளைத் தொடங்குவதைத் தடுக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்திய தலைமை நீதிபதி சூரிய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி. மோஹனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்து, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872-ன் பிரிவு 11-ன் படி 18 வயதுக்குட்பட்ட மைனர்கள் எவ்வித சட்டப்பூர்வ ஒப்பந்தங்களிலும் ஈடுபட முடியாது என்றும், அவ்வாறு செய்யப்படும் ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லாது என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற முன்னணி சமூக வலைதளங்களில் வெறும் பிறந்த தேதியை மட்டும் குறிப்பிட்டு 13 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் சுலபமாக கணக்குத் தொடங்கிப் பயன்படுத்துகின்றனர். இந்த இடைவெளியை அடைக்க ‘தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021’-ல் திருத்தம் செய்ய வேண்டும் அல்லது e-KYC போன்ற தகுந்த சான்றுகள் மூலம் பெற்றோரின் அனுமதியைப் பெறுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறுவர்களின் வயதைச் சரியாகச் சரிபார்க்கும் மற்றும் பாதுகாக்கும் அமைப்புகள் இல்லாததால், அவர்கள் இணையவழி சுரண்டல், பாலியல் அச்சுறுத்தல்கள், சைபர் புல்லிங் (இணையவழி கேலி/தொல்லைகள்) மற்றும் தவறான உள்ளடக்கங்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில், சிறுவர்களை டிஜிட்டல் தளங்களில் இருந்து முற்றிலுமாகத் தடுப்பது நோக்கமல்ல என்றும், அவர்களின் கல்வி மற்றும் திறன் வளர்ச்சிக்குத் தேவையான தளங்களை பெற்றோரின் கண்காணிப்போடு பாதுகாப்பாகப் பயன்படுத்த வழிவகை செய்வதே இதன்போக்கு என்றும் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.
