LATEST NEWS
“3 ஃபைல்களை நீ அவிழு… நானும் அவிழ்க்கிறேன்… நான் ரொம்ப மோசமான ஆளு..!” இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காதே…! மேடையில் ஆவேசமாக CM விஜய்க்கு ஆர்.எஸ். பாரதி நேரடி சவால்..!!
வேலூரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, முதலமைச்சர் விஜய்க்கு நேரடி சவால் விடுத்தார். சட்டமன்றத்தில் “கோப்புகள் எல்லாம் தயாராக டேபிளில் இருக்கிறது, நான் அவிழ்த்தால் என்னவாகும்” என்று விஜய் கூறியதைக் குறிப்பிட்ட ஆர்.எஸ். பாரதி, “அந்தக் கோப்புகளைப் பிரித்துப் பார்ப்பதுதான் உங்கள் வேலை, இந்த பூச்சாண்டி காட்டும் வேலை வேண்டாம்” என்று விமர்சித்தார். மேலும், எந்தவொரு தணிக்கை அறிக்கையும் அரசாங்கத்தைப் பாராட்டி அமைக்கப்படுவதில்லை என்றும், சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்படும் சாதாரண தணிக்கை அறிக்கைகளையே பெரிதுபடுத்தி ஊடகங்கள் பேசி வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
விஜய்யின் இந்த நிலைப்பாட்டை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் அணுகுமுறையோடு ஒப்பிட்டு ஆர்.எஸ். பாரதி கடுமையாகப் பேசினார். “நீ மூன்று கோப்புகளைத் திறந்தால், நானும் மூன்று கோப்புகளைத் திறப்பேன்; நான் மிகவும் மோசமான ஆள்” என்று சவால் விடுத்த அவர், முதன்முதலில் ஜெயலலிதா தனக்கு எதிராகச் செயல்பட்டபோது என்ன நடந்தது என்பதைப் பற்றி நினைவு கூர்ந்தார். மேலும், ஜெயலலிதா பெரிய தவறு எதுவும் செய்யாமல் டான்சி நிலத்தை வாங்கியதற்காகவே வழக்கு தொடரப்பட்டு, அது உச்சநீதிமன்றம் வரை சென்று அவர் தண்டனை அனுபவிக்க வேண்டியதாயிற்று என்று குறிப்பிட்டார்.
அரசியலில் தலைவர்களுக்கு ‘வாய்க்கொழுப்பு’ இருக்கக் கூடாது என்று எச்சரித்த ஆர்.எஸ். பாரதி, ஜெயலலிதா தனது தவறை உணர்ந்து நிலத்தைத் திரும்பக் கொடுத்திருந்தால் அந்தப் பிரச்சினை அப்போதே முடிந்திருக்கும் என்றார். அப்போதைய சூழலில் திமுக குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களையே சட்டமன்றத்தில் கொண்டிருந்த தைரியத்தில், ஜெயலலிதா ஆணவமாகப் பேசியதே அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது என்று சுட்டிக்காட்டினார். அதேபோல தற்போதைய சூழலிலும் தேவையில்லாத வீண் சவால்களை விடுக்காமல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது.
