CRIME
“நான்தான் சிவன்!”.. பக்தர்களிடம் சுருட்டிய போலி சாமியார்’சொத்து வேட்டை’ அம்பலம்.. குற்றப்பத்திரிகையில் அடுத்தடுத்த வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!
மகாராஷ்டிராவையே உலுக்கிய நாசிக் போலி சாமியார் அசோக் காரத் விவகாரத்தில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. பலாத்கார வழக்கு, பணமோசடி வழக்கு என அடுத்தடுத்து சிக்கி சிறையிலிருக்கும் இந்த போலி சாமியார், அவரது மனைவி மற்றும் 6 பேர் மீது அமலாக்கத்துறை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அதிரடியாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் சாமியாரின் மோசடிகள் குறித்த பல பகீர் தகவல்கள் இடம் பெற்றுள்ளது. தனக்கு தெய்வீக சக்தி இருப்பதாகக் கூறி, நோய்களைக் குணப்படுத்துவதாகவும் தொழிலில் லாபம் பெற்றுத் தருவதாகவும் நம்ப வைத்து, “அவதார பூஜைகள்” என்ற பெயரில் பக்தர்களிடம் கோடிக்கணக்கான பணம் மற்றும் சொத்துக்களை இந்த போலி சாமியார் மிரட்டிப் பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பக்தர்களிடம் ஏமாற்றிய இந்த பெரும் தொகையை, கூட்டுறவு கடன் சங்க ஊழியர் ஒருவரின் உதவியோடு பல பினாமி கணக்குகளைத் தொடங்கி அசோக் காரத் பதுக்கியுள்ளார். பின்னர் அந்தப் பணத்தைக் கொண்டு நாசிக், மும்பை, புனே, அகமது நகர் மற்றும் சோலாப்பூர் ஆகிய முக்கிய நகரங்களில் தனது குடும்பத்தினர் பெயரில் ஏராளமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கியுள்ளார் என்பதும் குற்றப்பத்திரிகையில் அம்பலமாகியுள்ளது. இந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், போலி சாமியாருக்குச் சொந்தமான சுமார் ரூ.36.90 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை இதுவரை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
