LATEST NEWS
“ஆதாரம் இருக்கா? நிரூபிங்க பார்ப்போம்!”.. சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு முன்னாள் அமைச்சர் மூர்த்தி ஓப்பன் சேலஞ்ச்.. அரசியலில் திடீர் பரபரப்பு..!!
முன்னாள் அமைச்சர் மூர்த்திக்கும் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கும் இடையே அரசியல் வார்த்தைப்போர் தீவிரமடைந்துள்ளது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் மூர்த்தி, தன் மீதான 20 சதவீத லஞ்சப் புகாரை நிரூபிக்க துணிச்சல் இருக்கிறதா என மூர்த்தி பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். தற்போதைய அமைச்சரின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய அவர், தன் மீது சேற்றை வாரி இறைப்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பத்திரப்பதிவுத் துறை விவகாரங்கள் குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் மூர்த்தி, கோயில் நிலங்களையோ அல்லது அரசுக்குச் சொந்தமான நிலங்களையோ யாரும் அவ்வளவு எளிதாகப் பதிவு செய்துவிட முடியாது என்று குறிப்பிட்டார். சமீபத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய பழனி நில பத்திரப்பதிவு விவகாரத்தைச் சுட்டிக்காட்டிய அவர், அது தெரியாமல் நடந்துவிட்டது என்று தற்போதைய அரசு கூறுவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். இத்தகைய தவறுகளுக்குத் துறையின் அஜாக்கிரதையே காரணம் என்றும் அவர் தனது பேச்சில் சாடியுள்ளார்.
