LATEST NEWS
அந்த 4 தொகுதிகள் இல்லையென்றால்… “எனக்கு கட்சி பதவியே வேண்டாம்” – உதயநிதிக்கு செக் வைத்த மாஜி அமைச்சர் சேகர்பாபு.. பரபரக்கும் அறிவாலயம்..!!
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க-வை மூன்றாகப் பிரித்து, முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபுவிடம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை மட்டும் ஒப்படைக்க உதயநிதி ஸ்டாலின் அக்கட்சியின் தலைமைக்கு யோசனை கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், பிரிக்கப்படும் புதிய மாவட்டங்களுக்குப் பரந்தாமன் மற்றும் ரங்கநாதன் ஆகியோரை மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கவும் உதயநிதி பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவல் வெளியான உடனே அதிர்ச்சியடைந்த சேகர்பாபு, மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தனக்குக் குறைந்தபட்சம் 4 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தால் மட்டுமே மாவட்டச் செயலாளர் பதவியில் நீடிப்பேன் என்றும், இல்லையெனில் கட்சிப் பதவியே தனக்கு வேண்டாம் என்றும் அவர் கறாராகக் கூறிவிட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உதயநிதி ஸ்டாலினின் இந்த புதிய மாவட்டப் பிரிப்புத் திட்டமும், அதற்குச் சேகர்பாபு காட்டியுள்ள கடும் எதிர்ப்பும் சென்னை தி.மு.க-விற்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த உள்கட்சிப் பூசலால் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே தற்போதைய சூழலில் குழப்பமும் பதற்றமும் நீடித்து வருகிறது.
