LATEST NEWS
FLASH: அரசையோ, அமைச்சர்களையோ விமர்சிப்பது குற்றமல்ல… அமைச்சர் ரமேஷை விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவு..!!
அரசு மற்றும் அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமாகாது என்றும், சமூகத்திற்கு இடையே பகை அல்லது வெறுப்பை ஊக்குவிப்பதாகக் கூற முடியாது என்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அரசுக்குக் கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. பழனி நில மோசடி விவகாரத்தில் தமிழக அமைச்சர் ரமேஷ் குறித்து அவதூறு பரப்பியதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வினோத் சூர்யா என்பவர் அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், தவெக நிர்வாகி வினோத் சூர்யாவை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டதோடு, ஆளுங்கட்சியின் விமர்சகர்கள் மீது பாயும் இத்தகைய கைது நடவடிக்கைகளுக்குத் தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு, தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு ஆளுங்கட்சிக்குக் கிடைத்த ஒரு குட்டாகவும் பார்க்கப்படுகிறது. கருத்துச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அக்கட்சியின் தொண்டர்களும், சமூக ஆர்வலர்களும் வரவேற்றுக் கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில், அமைச்சருக்கு எதிரான அவதூறு வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த முக்கிய உத்தரவு, வரும் நாட்களில் அரசியல் விமர்சனங்கள் மீதான போலீசாரின் அத்துமீறிய கைது நடவடிக்கைகளுக்குக் கடிவாளம் போடும் வகையில் அமைந்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
