LATEST NEWS
“இன்னும் 3 வருஷத்துல பிரதமர் நாற்காலி..!” மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன..? முதலமைச்சர் விஜயை ஓப்பனாக வறுத்தெடுத்த அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார்..!!
தமிழ்நாட்டில் ஏரிகள், குளங்கள் வறண்டு வரும் நிலையில், மக்கள் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் இன்னும் 3 ஆண்டுகளில் நாட்டின் பிரதமர் அரியணையை அலங்கரிக்க வேண்டும் என்ற டிஜிட்டல் பிராண்டிங் திட்டத்திற்கே முதலமைச்சர் விஜய்க்கு நேரம் சரியாக இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மிகக் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், மேட்டூர் அணையிலிருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காததாலும், காவிரியிலிருந்து தண்ணீர் பெறத் தவறியதாலும் டெல்டா மாவட்டங்களில் 700-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு போயுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். தவெக அரசு அமைய முட்டுக்கொடுத்த காங்கிரஸ் கட்சி தற்போது இதன் காரணமாக அதிர்ச்சியிலும் மனக்கசப்பிலும் உறைந்து போயுள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களை மூளைச்சலவை செய்து கின்னஸ் சாதனை படைத்த ரூட் மீடியா மற்றும் வாய்ஸ் ஆப் காமன்ஸ் ஆகிய நிறுவனங்கள், தற்போது தமிழ்நாட்டுக்கு முக்காடு போட்டது போல இந்தியாவிற்கும் முக்காடு போட வடநாட்டிலும் களமிறக்கப்பட்டுள்ளதாக உதயகுமார் பகிரங்கமாகப் போட்டுடைத்துள்ளார். தென் நாட்டிலிருந்து இந்தியாவிற்குப் பிரதமர் வரவேண்டும் என்று தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சட்டமன்றத்தில் பேசிய பேச்சு, இந்த நிறுவனங்களின் டிஜிட்டல் பிராண்டிங் திட்டத்தின் ஒரு பகுதிதான் என்பதை உறுதி செய்கிறது என்று சாடினார். தமிழ்நாட்டில் லாக்கப் மரணங்கள் மற்றும் காவிரிப் பிரச்சனை என எது குறித்தும் கவலைப்படாமல், சட்டமன்றத்தில் பதில் சொல்லாது மவுன மொழி பேசும் முதலமைச்சர் விஜய், அதிர்ஷ்டத்தால் வந்த அரியணையை வைத்துக் கொண்டு இந்தியப் பிரதமர் பதவிக்கு அதிரடி காட்டத் தயாராகிவிட்டார் என்று உதயகுமார் தனது வீடியோவில் கடுமையாக நையாண்டி செய்துள்ளார்.
