LATEST NEWS
“யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டாரு..!” உதயநிதிக்கு எதிராக மஞ்சள் துண்டு பாஸை எடுத்த நிர்மல் குமார்.. சட்ட சபையில் அனல் பறக்கும் விவாதம்..!!
தமிழக சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் இடையே ஜோதிடம் மற்றும் மஞ்சள் துண்டு தொடர்பாக கடுமையான காரசார விவாதம் நடைபெற்றது. அவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ஆளும் தவெக அரசை நோக்கி, “உங்கள் முன் இருக்கும் கோப்புகளை ஜோசியர் சொன்னால் தான் திறப்பீர்களா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். இந்த ஜோசியர் குறித்த விமர்சனம் அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதமாக மாறியது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “ஜோசியர் பேச்சை கேட்டு மஞ்சள் துண்டு அணிந்ததை தமிழ்நாடு பார்த்திருக்கிறது” என முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியை மறைமுகமாகக் குறிப்பிட்டு விமர்சித்தார். மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி தனது வாழ்நாளின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக மஞ்சள் துண்டு அணிந்து வந்ததன் பின்னணியில் ஜோதிட நம்பிக்கைகளும், கிரக பலன்களும் இருந்ததாக அரசியல் அரங்கில் நீண்டகாலமாகவே கடுமையான விமர்சனங்கள் இருந்து வருகின்றன.
