LATEST NEWS
“அடடே… இந்தக்காலத்துல இப்படி ஒரு பிள்ளையா..!” கோவிலில் கண்டெடுத்த தங்கக் கம்மலை உரியவரிடம் நேர்மையாக ஒப்படைத்த 6-ஆம் வகுப்பு சிறுமி… குடும்பத்தோடு வரவழைத்து பிரியாணி விருந்து வைத்து பாராட்டிய ஓட்டல் அதிபர்..!!
தென்காசி மாவட்டம், வெங்கடம்பட்டி ஆலமரத்தடி சுடலைமாடன் சுவாமி கோவில் கொடை விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற 6-ம் வகுப்பு படிக்கும் சிறுமி தீபிகா, அங்கு தவறி விழுந்த மற்றொரு நபரின் தங்கக் கம்மல் ஒன்றை கண்டெடுத்தார். பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல், அந்த தங்கக் கம்மலை உரியவரிடம் நேர்மையுடன் ஒப்படைத்தார்.
சிறுமியின் இந்த நேர்மையான செயலைப் பாராட்டி சால்வைகள், ரொக்கப் பரிசுகள், கேடயங்கள் வழங்கி சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் நேரில் சென்று பாராட்டி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ஆலங்குளத்தைச் சேர்ந்த ஒரு பிரியாணி ஓட்டல் உரிமையாளர் சாம்பவர் வடகரை ஹரிஹர செல்வன், சிறுமி தீபிகா, அவரது தாய் ஜெயந்தி, தந்தை திரவியக்கனி மற்றும் அவரது சகோதரனை ஆலங்குளத்திற்கு நேரில் வரவழைத்தார்.
அவர்களை அன்போடு வரவேற்ற அந்த பிரியாணி கடை நிர்வாகம், அந்த சிறுமியின் குடும்பத்தினர் அனைவருக்கும் பிரியாணி, சிக்கன் உள்ளிட்ட சுவையான அசைவ விருந்து அளித்து உபசரித்தது. மேலும் அந்த பிரியாணி ஓட்டல் அதிபர் ஹரி, சிறுமிக்கு ஐஸ்கிரீம் வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்வில் சமூக சேவகர் வெங்காடம்பட்டி திருமாறன், இன்ஜினியர் பார்த்திபன், மணியன் ஆகியோர் உடனிருந்து சிறுமியை வாழ்த்தினர்.
