LATEST NEWS
நகராட்சித்துறையில் ரூ.1,020 கோடி மெகா ஊழல்… திமுக மாஜி அமைச்சர் கே.என்.நேருவுக்கு சிக்கல்… லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி FIR..!!
கடந்த ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் சுமார் ரூ. 1,020 கோடி அளவிற்குப் பெருமளவு டெண்டர் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உட்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழுவினால் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த எஃப்.ஐ.ஆரில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக கே.என்.நேரு இருந்தபோது, அந்தத் துறை சார்ந்த அரசு ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்கள் தங்களுக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்குச் சாதகமாகத் திட்டமிட்டு மாற்றியமைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாகச் சேகரிக்கப்பட்ட பல்வேறு ஆவணங்கள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்களின் அடிப்படையிலேயே இந்தத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்த எஃப்.ஐ.ஆரில் கே.என்.நேரு முதன்மைப் குற்றவாளியாக (A-1) சேர்க்கப்பட்டுள்ளதோடு, அவரது சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான கவி பிரசாத் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. டெண்டர் மதிப்பில் சுமார் 7.5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை ‘கட்சி நிதி’ என்ற பெயரில் சட்டவிரோதமாகப் பெருந்தொகை லஞ்சமாகப் பெறப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அமலாக்கத்துறை அளித்த 258 பக்கங்கள் கொண்ட விரிவான விசாரணை அறிக்கையின் தொடர்ச்சியாக, கே.என்.நேருவின் வீடு உட்பட தமிழகம் முழுவதும் சுமார் 30 இடங்களில் அண்மையில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளைத் தொடர்ந்து இந்த அதிகாரப்பூர்வ எஃப்.ஐ.ஆர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
