LATEST NEWS
“காப்பாத்துங்க… நான் உள்ள தான் இருக்கேன்..!” 50 அடி போர்வெல்லுக்குள் இருந்து கேட்கும் 9 வயது சிறுவனின் குரல்… பட்டம் பிடிக்கப்போய் நேர்ந்த பயங்கரம்..! கண்ணீரோடு காத்திருக்கும் பெற்றோர்..!!
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தின் ராம்கர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புடோலி கிராமத்தைச் சேர்ந்த சீஷ்ராம் என்பவரின் 9 வயது மகன் பானு, திங்கள்கிழமை மாலை அறுந்து வந்த பட்டத்தைப் பிடிப்பதற்காக நிலத்தை நோக்கி ஓடியுள்ளான். அப்போது, அங்குள்ள ஒரு வயல்வெளியில் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டிருந்த பழைய ஆழ்துளைக் கிணற்றின் மீது வைக்கப்பட்டிருந்த கல் சற்றே விலகியிருந்துள்ளது. சிறுவன் அதன் மீது கால் வைத்ததும் கல் நகர்ந்து, பானு நேரடியாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டான். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுமார் 400 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளைக் கிணற்றில், சிறுவன் பானு தற்போது 50 முதல் 55 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. விபத்து நடந்தவுடனே கிராம மக்கள் அங்கு திரண்டு மீட்புப் பணியில் ஈடுபட முயன்றனர். அப்போது போர்வெல்லின் உள்ளே இருந்து சிறுவனின் குரல் தெளிவாகக் கேட்டுள்ளது. ஆரம்பக்கட்ட தகவல்களின்படி சிறுவன் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவனது சத்தம் தொடர்ந்து கேட்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவனைக் காயமின்றி பத்திரமாக மீட்பதற்கே முதன்மை முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்ததும் காவல் துறையினரும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர். ஆழ்துளைக் கிணற்றின் அருகே இரண்டு ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் இணையாகக் குழி தோண்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ராம்கர் தொகுதி எம்.எல்.ஏ சுகவந்த் சிங், சப்-டிவிஷனல் மேஜிஸ்திரேட் மனிஷா ரேஷம், வட்டாட்சியர், டி.எஸ்.பி உள்ளிட்ட உயரதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே எஸ்டிஆர்எஃப் மற்றும் என்டிஆர்எஃப் மீட்புக் குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. சிறுவனின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அனைவரும் அவன் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்று அழுது பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
