LATEST NEWS
ரூ.400 கோடி மின்சாரத்துறை முறைகேடு… விடிவதற்குள் பாய்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை… சிக்கலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…!!
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் மின்சாரத்துறையில் சுமார் ₹400 கோடி வரை முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை உட்பட தமிழகத்தின் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாகக் கிடைத்த ரகசியத் தகவல்கள் மற்றும் முதற்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில், தவெக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இந்த மெகா சோதனையைத் தொடங்கியுள்ளனர். சென்னை மற்றும் முக்கிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு முக்கியப் புள்ளிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்தச் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இன்று காலை முதல் நடைபெற்று வரும் இந்தச் சோதனையின் போது, மின்சாரத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி வருவதாகத் தெரிகிறது. இந்தச் சோதனையில் முறைகேட்டிற்கான உறுதியான ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத சொத்துக்கள் ஏதேனும் முழுமையாகக் கைப்பற்றப்பட்டால், அது அன்றைய காலகட்டத்தில் மின்சாரத்துறையை நிர்வகித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகப்பெரிய சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் என்று அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்கள் கருதுகின்றன.
தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முந்தைய திமுக அரசின் மீதான ஊழல் புகார்களைக் கையில் எடுத்துள்ள இந்த லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சோதனையின் முடிவில் ஏதேனும் கைது நடவடிக்கைகள் பாயுமா அல்லது செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படுமா என்ற விவாதங்கள் தற்பொழுது தீவிரமடைந்துள்ளன.
