LATEST NEWS
CM விஜயிடம் அதை கேட்க வன்னி அரசுக்குத் தைரியம் இருக்கா..? வேங்கை வயல் விவகாரத்தில் கோவி.செழியன் பகிரங்க சவால்..!!
வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசிடம் மறுவிசாரணைக்கு உத்தரவிடக் கோரும் அரசியல் நேர்மை விசிக-வைச் சேர்ந்த அமைச்சர் வன்னி அரசுக்கு இருக்கிறதா என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன் மிகக் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார். மாணவர் பாரதிதாசன் கல்வி உதவித்தொகை விவகாரத்தில் திமுக நாடகம் ஆடுவதாகவும், வேங்கைவயல் சம்பவத்திற்கு திமுக முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வன்னி அரசு விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கோவி.செழியன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்தில் வேங்கைவயல் விவகாரத்தில் விரிவான அறிவியல் பூர்வ விசாரணை நடத்தப்பட்டு, முறையான குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கோவி.செழியன் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு மற்றும் அதன் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆகியோர், அந்த விசாரணையில் கண்டறியப்பட்டவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்று கருதினால், தாராளமாக அந்த குற்றப்பத்திரிகையைத் திரும்பப் பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு குற்றப்பத்திரிகையைத் திரும்பப் பெற்றுவிட்டு, இந்த விவகாரத்தில் மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முதலமைச்சர் விஜயிடம் வலியுறுத்த வன்னி அரசுக்குத் தைரியம் இருக்கிறதா என்று சவால் விடுத்துள்ளார். கொள்கை எதிரியான பாஜகவுடன் மறைமுகக் கூட்டு வைத்துள்ள தவெக அரசின் பண்ணையார் ஆட்சியில் மந்திரி பதவியை ஏற்றுக்கொண்ட வன்னி அரசு, பதவிக்காகப் பொய்யானக் கருத்துகளைப் பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தன் செயல்களுக்காக அவர்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோவி.செழியன் சாடியுள்ளார்.
