LATEST NEWS
வெடித்தது மோதல்..! என் மிசா கைதை எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை… தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஆவேசப் பதிலடி..!!
திமுக முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மிசா காலக் கைது வரலாற்றை எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும், தனது தியாகத்திற்கு மதிப்பெண் போட இங்கு எவனுக்கும் தகுதி கிடையாது என்றும் தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். சட்டப்பேரவையில் அண்மையில் ஆளுங்கட்சியான தவெக தரப்பில் எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அதிரடி உரை அமைந்துள்ளது.
திமுகவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மிசா தியாகக் குறிப்புகள் மறைந்த அண்ணன் சிட்டிபாபுவின் சிறை டைரியிலும், சிறைச்சாலைச் சித்திரவதைகள் குறித்து ஆராய அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அமைத்த இஸ்மாயில் கமிஷன் அறிக்கையிலும் காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டாகப் பதிவாகியுள்ளது என்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். படிக்கத் தெரிந்தவர்கள் இந்த வரலாற்று ஆவணங்களை எடுத்துப் படித்துத் தெரிந்துகொள்ளலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட மக்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்துக் கேட்கும் அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறுவதாகவும், மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே இத்தகைய அவதூறுகளைப் பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
