CINEMA
தமிழக முதல்வர் விஜய்க்கு விஷால் கொடுத்த விலைமதிப்பற்ற பரிசு…”பூங்கொத்தை விட இது நீண்டகாலம் உதவும்…வழக்கமான பாணியை உடைத்த விஷால்.. முதல்வர் விஜய்யிடம் கொடுத்த கல்விப் பரிசு… வைரலாகும் கடித விவரங்கள்…!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் ஜோசப் விஜய்யை, நடிகர் விஷால் நேரில் சந்தித்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பொதுவாக முக்கியப் புள்ளிகளைச் சந்திக்கும் போது பொன்னாடை அல்லது பூங்கொத்து வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் திரையுலகினருக்கு மத்தியில், விஷால் தனது வழக்கமான பாணியில் நற்பண்பு நிறைந்த ஒரு விலைமதிப்பற்ற பரிசை விஜய்க்கு வழங்கியுள்ளார். தனது ‘தேவி அறக்கட்டளை’ மூலம் ஆண்டுதோறும் ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவி வரும் விஷால், ஆடம்பரப் பரிசுகளைத் தவிர்த்து, சம்பந்தப்பட்ட நபர்களின் பெயரிலேயே ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், தற்போதைய முதல்வர் விஜய்யின் பெயரிலேயே கல்வி பயில வழியற்ற மூன்று ஏழை மாணவிகளின் உயர் கல்விச் செலவை முழுமையாக ஏற்பதாக அறிவித்து, அதற்கான கடிதத்தை அவரிடம் நேரில் வழங்கியுள்ளார்.
விஷால் வழங்கிய அந்தக் கடிதத்தில், “உங்களின் ஊக்கமளிக்கும் பயணமும், மக்கள் சேவையில் உங்களுக்கிருக்கும் அர்ப்பணிப்பு உணர்வும் இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. தற்காலிகமாக இருக்கும் ஒரு பூங்கொத்தை வழங்குவதற்குப் பதிலாக, ஒரு குழந்தையின் கல்விக்கு ஆதரவளிப்பது நீண்டகால நற்பலனைத் தருவதோடு, அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க உதவும் என்று நம்புகிறேன். எனவே, உங்கள் மீதான பாராட்டின் அடையாளமாக, பின்தங்கிய சூழலைச் சேர்ந்த மூன்று மாணவிகளின் உயர் கல்விச் செலவை உங்கள் பெயரில் ஏற்று நடத்த முடிவு செய்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த விபரங்களின்படி, தனியொரு பெற்றோரைக் கொண்ட முதலாம் தலைமுறை பட்டதாரியான எம்.லில்லி புஷ்பம் (B.Sc CS – 437 மதிப்பெண்), தினக்கூலி பெற்றோரைக் கொண்ட பி.தர்ஷினி (B.Com – 431 மதிப்பெண்) மற்றும் முதலாம் தலைமுறை பட்டதாரியான எம்.ஹரினி (BCA – 399 மதிப்பெண்) ஆகிய மூன்று மாணவிகளின் முழு உயர் கல்விச் செலவையும் விஷால் ஏற்றுக்கொண்டுள்ளார்.
தன் பெயரில் செய்யப்பட்ட இந்த அர்த்தமுள்ள மற்றும் உன்னதமான கல்விப் பரிசைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், நடிகர் விஷாலுக்குத் தனது நெகிழ்ச்சியையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், மாணவிகளின் கல்வி விவரங்கள் அடங்கிய கடிதத்தைப் படித்துப் பார்த்த அவர், விஷாலின் இத்தகைய உன்னதமான சமூக சேவை முயற்சிகள் எவ்விதத் தொய்வும் இன்றித் தொடர்ந்து தொண்டாகத் தொடர வேண்டும் என வாழ்த்தியுள்ளார். அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களைக் கடந்து, ஏழை மாணவிகளின் எதிர்காலத்திற்கு ஒளியேற்றும் வகையில் அமைந்துள்ள விஷாலின் இந்த முன்னெடுப்பு தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
