LATEST NEWS
ஆவணங்களை கொடுத்தா உடனே எஃப்.ஐ.ஆர்… “யாரையும் விடமாட்டோம்” என போலி பத்திரப்பதிவு ஆசாமிகளுக்கு அமைச்சர் கொடுத்த மரண மாஸ் வார்னிங்..!!
பழனி போலி பத்திரப்பதிவு மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட அனைவரும் நிச்சயமாகக் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத் துறையில் கடுமையான முறைகேடுகளும், ஊழல்களும் மலிந்திருந்ததாகக் குற்றம் சாட்டிய அவர், இந்த மோசடி தொடர்பாகத் தற்போது விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற போலி ஆவண மோசடிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறிய அமைச்சர், வெறும் கோவில் நிலங்கள் மட்டுமின்றி நீர்நிலைகளையும் ஆக்கிரமித்துப் போலி பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தார். மேலும், பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகளின் நேரடி ஒத்துழைப்பு இல்லாமல் இத்தகைய பிரம்மாண்ட மோசடிகள் நடைபெற வாய்ப்பில்லை என்றும், இது தொடர்பாகப் பொதுமக்கள் தங்களிடம் உள்ள போலி பத்திரப்பதிவு ஆவணங்களை வழங்கினால் குற்றவியல் வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மின்துறையில் ஒப்பந்தப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்துப் பேசிய அவர், தற்போதைக்கு அதுகுறித்து எந்தவொரு உறுதியும் அளிக்க முடியாது என்றும், முதலில் எத்தனை பணியாளர்கள் உள்ளனர் என்பது குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தினார். மேலும், போலி பத்திரப்பதிவு தொடர்பாகத் தொடர்ந்து அதிக புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால், இதனைத் தடுக்கத் தனிப்பிரிவு ஒன்று அமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் விவரித்துள்ளார்.
